
திருச்சி மாநகர், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் (வயது 45) கடந்த ஜூலை 30 ஆம் தேதி அரிஸ்டோ இரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியதில் காயமுற்று அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காவலர் ஸ்ரீதர் மறைவுக்கு நேற்று இரங்கல் தெரிவித்திருந்தார். மேலும் தலைமைக் காவலர் ஸ்ரீதர் குடும்பத்தினருக்கு 25 இலட்சம் ரூபாய்க்கான நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பும் வழியில் இன்று (27.08.2023) திருச்சி விமான நிலையத்தில், ரூபாய் 25 இலட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை மறைந்த தலைமைக் காவலர் ஸ்ரீதர் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எம். பிரதீப்குமார், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் என். காமினி ஆகியோர் உடனிருந்தனர்.