Skip to main content

பள்ளி மாணவியை தாக்கிய பேருந்து நடத்துநர்; போலீஸார் விசாரணை

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Bus conductor assaults school girl in chengalpattu

 

சில நாட்களுக்கு முன்பு, நீலகிரி மாவட்டம் ஊட்டி செல்லும் பேருந்து ஒன்றில் பள்ளி மாணவ மாணவிகளை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் பேருந்து நடத்துநர் பாபு என்பவர் கடுமையான சொற்களால் பேசியிருந்தார். அதுமட்டுமல்லாமல், இது குறித்து கேட்ட சக பயணிகள் மீது கொலை மிரட்டல் விடுப்பது போல் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசுபொருளாக அமைந்தது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பேருந்து நடத்துநர் ஒருவர் 10ஆம் வகுப்பு மாணவியை கண்ணத்தில் அறைந்து கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று அரங்கேறி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு திருமணமாகி மோனிஷா (15) என்ற மகள் உள்ளார். இவர், மாமல்லபுரம் அடுத்துள்ள பூஞ்சேரியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பேருந்து மூலம் தனது பள்ளிக்கு செல்வது வழக்கம்.

 

இந்த நிலையில், நேற்று (10-10-23) மாலை மோனிஷாவின் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு வகுப்பை முடித்த மோனிஷா, மாலை 5:30 மணி போல் மாமல்லபுரம் செல்வதற்காக பூஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது, கூட்ட நெரிசலுடன் ஒரு மாநகர பேருந்து வந்தது. அந்த பேருந்தில் ஏறிய மோனிஷா, நிற்க கூட இடம் இல்லாத காரணத்தால் பேருந்து படியில் நின்று கொண்டு தவித்துள்ளார். 

 

இதனையடுத்து, அந்த பேருந்தில் பயணிகள் ஏறுவதற்கு முன்பாகவே திடீரென்று பேருந்து இயக்கப்பட்டு எலெக்ரானிக் கதவுகள் மூடப்பட்டது. இதனால் பயணிகள் கூட்டமாக பேருந்து படியில் நின்று கொண்டிருந்தனர். இதில் ஆத்திரமடைந்த பேருந்து நடத்துநர், படியில் நின்று கொண்டிருந்த மோனிஷாவின் கன்னத்தில் 3 முறை அறைந்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

 

இதனால், வலியால் அவதிப்பட்ட மோனிஷா நடத்துநரின் செயல் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த மோனிஷாவின் பெற்றோர், இந்த சம்பவம் குறித்து மாமல்லபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், மாணவியை தாக்கிய நடத்துநர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு'-தலைகுனிய வைத்த சிறுமிகளின் வைரல் வீடியோ!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
shocking video of school girls

திருப்பூரில் பள்ளி கழிவறையைப் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள குமாரபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி உள்ளார். இந்நிலையில் பள்ளியில் பயின்று வந்த இரண்டு பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகள் பேசும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் வருவாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். இதில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை நிர்பந்தித்து கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக  அறிவியல் ஆசிரியை சித்ராவும் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்தச் சிறுமிகள்  பேசி வெளியிடப்பட்ட வீடியோவில், 'யார் ஸ்கூல் பாத்ரூமை சுத்தம் செய்தது; நாங்க ரெண்டு பேரும்தான் பண்ணுவோம். யார் உங்களை பண்ண சொல்வது; எச்.எம் மிஸ், சயின்ஸ் மிஸ். நீங்கள் கழுவ மாட்டேன் எனச் சொல்ல வேண்டியது தானே; சொன்னா திட்டுவாங்க. எதிர்த்தா பேசுறனு குச்சியை எடுத்து வெளுப்பாங்க.  உங்கள் வீட்டில் சொல்ல வேண்டியது தானே; வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு' எனப் பேசும் அந்த வீடியோ மேலும் வைரலாகி வருகிறது.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.