
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது வீரட்டகரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேல். இவரது மகன் மணிகண்டன்(25) கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வருகிறார். இதற்காக பல்வேறு ஊர்களுக்கும், மாவட்டங்களுக்கும் சென்று கரும்பு வெட்டி அதன் மூலம் பணம் சம்பாதித்து தனது குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருந்து வந்துள்ளார். இவருடன் கரும்பு வெட்டும் வேலை பார்த்து வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த ஐந்து வருடமாக காதலித்து வந்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் இனியும் காலம் கடத்துவது பயன் இல்லை எனவே காதலியை மணம் முடித்து மனைவியாக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் மணிகண்டன். நேற்று முன்தினம் அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண்களுக்கும் மணிகண்டனுக்கும் சிறு சச்சரவு ஏற்பட்டுள்ளது. காதலித்த பெண் திருமணத்திற்கு மறுத்ததும் மணிகண்டன் மனமுடைந்து போனார். தன் வீட்டிற்குச் சென்ற மணிகண்டன் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்த தகவல் திருக்கோவிலூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மணிகண்டன் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்த பெண் திருமணத்திற்கு மறுத்ததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருக்கோவிலூர் பகுதி பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.