Published on 14/02/2024 | Edited on 14/02/2024
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார், திருச்சி கிராப்பட்டி டி.எஸ்.பி. பட்டாலியன் இரண்டாவது கேட் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களைத் தணிக்கை செய்தனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் பெட்டி பெட்டியாக பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து திருச்சி கல்லுக்குழியைச் சேர்ந்த சாதிக் பாட்சா என்ற வியாபாரியையும் கைது செய்தனர். அவர் தற்போது நாகமங்கலத்தில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.