Skip to main content

பாஜகவின் தில்லு முல்லும்  தமிழர்கள் கற்க வேண்டிய பாடமும் - பெ.மணியரசன்

Published on 21/05/2018 | Edited on 22/05/2018

 

perani2

 

 


நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர் பெ.மணியரசன் விமர்சனம்:

’’வாக்குரிமை தான் மக்களாட்சியின் உயிர்த்துடிப்பு என்று ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்தது. காலப்போக்கில் வாக்களிப்பது என்பது கவர்ச்சி காட்டி மக்களின் கவனத்தைத் திசை திருப்பி வாக்குகளைக் களவாடிக் கொள்வது என்பதாகச் சீரழிந்தது. அதன்பிறகு, பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்படுவதாக “வாக்குரிமை” மாற்றப்பட்டது. அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பணம், பதவி ஆசை காட்டி கடத்திக் கொண்டு போவது, கட்சி மாறச் செய்து பலனடைவது என்ற அரம்பத்தனமாக (ரவுடித்தனமாக) “சனநாயகம்” மாறியது.

 

 இந்தச் சின்னத்தனங்கள் அனைத்தும் இப்போது கர்நாடக பதவி வேட்டையில் அரங்கேறின; ஆட்டம் போடுகின்றன. இந்த ஆட்டத்தில் முறை தவறி – முதல்வர் பதவியைப் பெற்ற பா.ச.க.வின் எடியூரப்பா மூன்று நாளில் அதை இழந்தார். அறம், ஒழுக்கம், சட்டம் நீதி என்பவற்றைப் பற்றி கவலைப்படாத பா.ச.க. கட்சியைச் சேர்ந்த கர்நாடக ஆளுநர் வச்சுபாய் வாலா, சட்டப்பேரவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற குமாரசாமியைப் புறக்கணித்துவிட்டு, அறுதிப்பெரும்பான்மை பெறாத பா.ச.க.வைச் சேர்ந்த எடியூரப்பாவை முதலமைச்சராக்கி தன்னல நோக்கில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார். 

 

கடந்த 12.05.2018 அன்று நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ச.க. – 104, காங்கிரசு – 78, மதச்சார்பற்ற சனதா தளம் – 37 இடங்களைக் கைப்பற்றின. தற்சார்பாளர்கள் (சுயேச்சைகள்) – 2 பேர். முதலமைச்சர் பதவி ஏற்க 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் 104 உறுப்பினர்களைக் கொண்ட பா.ச.க.வின் எடியூரப்பாவுக்கு முதலமைச்சர் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார், ஆளுநர் வச்சுபாய் வாலா!

 

ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை விலைக்கு வாங்கப் பல கோடி ரூபாய் தருவதற்கு தூது விட்டுப் பார்த்தது பா.ச.க.! அத்துடன் சாதி மற்றும் அமைச்சர் பதவி ஆகியவற்றைப் பயன்படுத்திப் பார்த்தது. ஆனாலும், காங்கிரசும், மதசார்பற்ற சனதா தளமும் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களை வளைத்து, கடத்தி, பதுக்கி வைத்துக் கொண்டார்கள். பா.ச.க. அரசியல் “ரிஷி”களின் பாச்சா பலிக்கவில்லை! 

 

அதேவேளை தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்ட காங்கிரசும், சனதா தளமும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முடிவு செய்து, ம.ஜ.த. தலைவர் குமாரசாமியை முதலமைச்சராகிட ஒப்புக் கொண்டுள்ளன. முப்பத்தேழு உறுப்பினர்களை மட்டும் கொண்ட குமாரசாமி முதலமைச்சர்; 78 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரசுக் கட்சிக்கு முதலமைச்சர் பதவி இல்லை! 

 

 

தேவகௌடா – குமாரசாமி குடும்பத்தாரின் பதவி வெறிக்கு, முதலமைச்சர் என்ற  தீனி போட்டாலொழிய பாரதிய சனதாக் கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முடியாது என்று கருதிய காங்கிரசு, இப்போதைக்கு குமாரசாமி தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளது.

 

 குமாரசாமியோ ஐந்தாண்டுகளும் நான்தான் முதல்வர் என்று இப்போதே சொல்லத் தொடங்கிவிட்டார். காலம் செல்லச் செல்ல காங்கிரசு – ம.ஜ.த. கூட்டணியில் பதவிச் சண்டை வருவதற்கு வாய்ப்புண்டு! ஏனெனில், இரண்டு கட்சித் தலைமைகளும் “இலட்சிய செம்மல்”கள் இல்லை! பதவி வெறி வந்திட – பத்தையும் இழக்கத் துணிந்த கட்டைகள்! 

 

வரும் 23.05.2018 அன்று காங்கிரசு – ம.ஜ.த. கூட்டணியின் முதல்வராக குமாரசாமி பதவியேற்க இருக்கிறார். நீண்டகாலமாகக் கங்காணி அதிகாரப் பசியில் துடித்துக் கிடந்த குமாரசாமி, இப்போது கோயில் கோயிலாகச் சென்று கும்பிட்டு பதவிப் பூசை நடத்தி வருகிறார். 

 

சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதா என்பதை அவர்கள் கையளிக்கும் உறுப்பினர் பட்டியலிலிருந்து கணக்கிட்டு முடிவு செய்து, பெரும்பான்மை ஆதரவு உள்ள ஒருவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். உறுதியான பெரும்பான்மை இருக்கிறதா என்ற ஐயம் எழுமானால், சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை மெய்ப்பிக்க கெடு விதித்திருக்க வேண்டும். 

 

பா.ச.க.வுக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டாலும், ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி மேகாலயா, மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில், கட்சித்தாவல் மூலம் சிறுபான்மை பா.ச.க. ஆட்சியை பெரும்பான்மை ஆட்சியாக்கும் “சாகசத்தை” – ஆன்மிகம் பேசும் பா.ச.க. ஆளுநர்கள் செய்தார்கள். அந்த தில்லுமுல்லு காங்கிரசு – மதச்சார்பற்ற சனதா தள “சாகசங்களால்” முறியடிக்கப்பட்டது! 

 

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் பா.ச.க. தலைவர் அமித்சாவும் எந்தத் தில்லுமுல்லும் செய்யத் தயங்காதவர்கள் என்பதற்கு, அவர்களின் கர்நாடகப் பித்தலாட்டம் மற்றுமொரு எடுத்துக்காட்டு! 

 

ஓர் ஆறுதல்; உச்ச நீதிமன்றம் சட்டப்பேரவையில் எடியூரப்பா மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஒரு நாள் அவகாசம் வைத்து ஆணையிட்டது. அந்தநிலையில்தான், பெரும்பான்மை பெற முடியாத எடியூரப்பா பதவி விலகினார். 

 

ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க. ஆகிய இரண்டும் ஆன்மிக ஒழுக்கம் இல்லாதவை மட்டுமல்ல, அரசியல் ஒழுக்கமும் இல்லாதவை. சனநாயகம் என்றால் அவற்றிற்கு ஒவ்வாமை! தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம், திட்டக்குழு போன்ற சனநாயகத்தை உறுதி செய்யும் நிறுவனங்களை ஒவ்வொன்றாகக் காலி செய்து வருகின்றன பா.ச.க.வும், ஆர்.எஸ்.எஸூம்!

அதேவேளை, மதச்சார்பற்ற சனதா தளமும், காங்கிரசும் பொது இலட்சியமோ – பொது வேலைத்திட்டமோ எதுவுமின்றி அதிகார வேட்டைக்காகக் கூட்டணி சேர்ந்துள்ளன. 

 

தமிழ்நாட்டில் துணை முதல்வர் ஒ. பன்னீர்ச்செல்வம், “பா.ச.க.வின் தென்னக நுழைவுக்கான மணியோசை ஒலித்துவிட்டது” என்று வாழ்த்துக் கூறி, பா.ச.க.வின் சனநாயக விரோத – சட்ட விரோதச் செயல்களை வரவேற்றுள்ளார். 

 

செயலலிதா அம்மையார் இறந்தவுடன், தமிழ்நாட்டில் அதிகார வேட்டைக்காக சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கடத்திப் பதுக்கி வைத்த “சாகசங்கள்” தமிழ்நாட்டிலும் நடந்தன. கர்நாடகத்தில் நடந்த விகாரமான அதிகார வேட்டை அரசியல், தமிழ்நாட்டில் நடக்காது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை! 

தேர்தல் அரசியல் மிகமிக மோசமாகச் சீரழிந்துவிட்டது.

 தமிழ்நாடு இந்தச் சீரழிவிற்கு விதி விலக்கன்று! தேர்தல் கட்சிகளுக்கு வெளியே, மக்கள் தன்னெழுச்சியாக தங்கள் வாழ்வுரிமைகளைப் பாதுகாத்திடப் போராடுவது தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. அதேபோல், சனநாயக உரிமைகள் பலவற்றைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களையும் தேர்தல் கட்சிகளுக்கு வெளியே தன்னெழுச்சியாக ஆற்றல் மிகு இளையோரும், அனுபவமிக்கப் பெரியோரும் இணைந்து நடத்த வேண்டும். இல்லையேல், எந்த இலட்சியமும் இன்றி எந்தப் பொது நல அக்கறையுமின்றி – தாயகப் பற்றும் தமிழினப் பற்றும் இன்றி, அதிகார வேட்டைக்கு அடித்துக் கொள்ளும் அரசியல் பெருச்சாளிகளின் பின்னால், மக்கள் அணிவகுத்து தங்கள் வாழ்வை அழித்துக் கொள்வதுதான் மிஞ்சும்! பழைய பெருச்சாளிகள் போதாதென்று, இரசினிகாந்து – கமலகாசன் போன்ற புதிய பெருச்சாளிகளும் அதிகார வேட்டை அரசியலுக்குள் அரிதாரம் பூசிவரும் அவலம் தொடரும்!  

 

தமிழ்நாட்டு உரிமைகள் இந்திய அரசாலும் அண்டை மாநிலங்களாலும் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மேலிருந்து கீழ் வரை சமூகக் கட்டமைப்பு ஊழலால் உலுத்துப்போய் நிற்கிறது! வேலையின்மை, விலை உயர்வு, வாழ்க்கைப் பாதுகாப்பின்மை, வறுமை ஆகியவற்றால் மக்கள் ஒவ்வொரு நொடியும் குமுறுகின்றனர். 

 

தேர்தல் ஆதாயக் கட்சிகளால் தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்க முடியவில்லை. 

தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை செழுமைப்படுத்த முடியவில்லை! இவ்வேளையில், தேர்தல் ஆதாயக் கட்சிகளுக்கு அப்பால் நடந்து வரும் தமிழர் போராட்டங்கள் மேலும் மேலும் வலுப்பட வேண்டும்; மேலும் மேலும் வரிவடைய வேண்டும் என்ற உணர்வையும் உறுதியையும் தமிழர்கள் பெற வேண்டும்!

 

காமவெறியைவிட கொடியது அதிகாரவெறி – பதவிவெறி – பணவெறி என்ற நடைமுறை உண்மைகளை நாம் தமிழ்நாட்டிலேயே பார்த்திருக்கிறோம். எனவே, தமிழர் தன்னெழுச்சித் தற்காப்புப் போராட்டங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்! 
’’
 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக பா.ஜ.க.வினருக்கு பிரதமர் மோடி பாராட்டு! 

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Prime Minister Modi praises Tamil Nadu BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் இந்த மக்களவை தேர்தலில் திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அ.ம.மு.க. பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

இந்நிலையில் பிரதமர் மோடி நமோ செயலி (NAMO APP) மூலம் ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற தலைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளுடன் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக பாஜகவின் அனைத்துத் தொண்டர்களும் மிக நீண்ட காலமாக நன்றாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர். ‘எனது பூத், வலிமையன பூத்’ என்றால் எனது வாக்குச் சாவடி வலிமையானது என்று பொருள். இந்த திட்டம் அனைத்து பா.ஜ.க. தொண்டர்களையும் இணைப்பதுடன் ஒருவருக்கொருவரும் கற்றுக்கொள்ள உதவும்.

தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் வணக்கத்தோடு பேசத் தொடங்குகிறேன், ஆனால் இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஒரு தொண்டர் மற்றொரு தொண்டரை வாழ்த்துகிறார். வணக்கம் என்றவுடன், தொண்டர்களுக்குள் ஒரு உணர்வு வரும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பள்ளி நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம், 25, 30 வருடங்கள் கடந்தாலும், சிறியவர், பெரியவர் என்று யாரும்  பாராமல் ஒருவரை ஒருவர்  மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார்கள். அதேபோல், இது தேர்தல் பணி தொடர்பான ஒரு திட்டம் என்பதால் நானும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறேன். உங்கள் எல்லோரையும் போல என் வாழ்வின் பெரும்பகுதியை ஒரு தொண்டனாகவே உழைத்திருக்கிறேன், அதனால்தான் இன்று நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருவதால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொது நிகழ்ச்சிகளுக்காக கடந்த முறை தமிழகம் வந்தபோது தமிழக மக்களின் ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொண்டர்களின் கடின உழைப்பைப் பார்க்க முடிந்தது, அப்படிப்பட்ட தொண்டர்களைப் பெற்றதை பெருமையாக உணர்ந்தேன். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்மாதிரியாக கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதும், அதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதும் எங்களது உறுதி. பா.ஜ.க.வின் பெண் தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

போதைப்பொருட்கள் நம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அழிக்கும். கடந்த நாட்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருள் பதுக்கல்களும், அதற்கு முக்கிய காரணமானவர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்புடையவர்கள். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே நீங்கள் அனைவரும் நம் குடும்பங்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” எனப் பேசினார். 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.