முன்னாள் அமைச்சர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் வாழ்க்கை வரலாற்று நூலை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நவ. 17ம் தேதி, சேலத்தில் வெளியிடுகிறார். இதுகுறித்து சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுமான வீரபாண்டி ராஜா கூறியதாவது:
சேலம் மாவட்ட திமுகவின் ஆணிவேராகத் திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். அவர் பிறந்த 1957ம் ஆண்டு முதல், இறுதிக்காலம் வரை அடிமட்டத் தொண்டனாக இருந்து மாவட்டச் செயலாளர் வரை பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றி உள்ளார்.

அதேபோல பூலாவரி அக்ரஹார ஊராட்சித் தலைவர் முதல் அமைச்சர் வரை பல பதவிகளை வகித்து பல்வேறு அரும்பணிகளை ஆற்றியுள்ளார். அதனால்தான் அவர் மறைந்த பின்னரும், தொண்டர்கள் மற்றும் சேலம் மாவட்ட மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் வாழ்ந்த காலத்தில் பெரியார், அண்ணா, தலைவர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட தலைவர்களுடன் கொண்ட உறவுகள், குடும்ப வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்கள், பொதுவாழ்வில் பெற்ற இனிமையான அனுபவங்கள், கடந்து வந்த கசப்பான சோதனைகள், திமுக தொண்டர்கள் மற்றும் சந்தித்த பிற மனிதர்களை பற்றி எழுதி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அவற்றை எல்லாம் தொகுத்து, 'திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்' என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட உள்ளது. வரும் 17ம் தேதி காலை 9 மணிக்கு 5 சாலையில் உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. திமுக தலைவர் கலந்து கொண்டு, நூலை வெளியிடுகிறார். இவ்விழாவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது பற்றும், பாசமும் கொண்ட பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு வீரபாண்டி ராஜா கூறினார்.