Skip to main content

800 ஆண்டுகளுக்கு முன்பே நதி நீர் இணைப்பு விஞ்ஞானி; தமிழக அரசு மரியாதை!

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

River water connection scientist 800 years ago ...!

 

மனித குலத்தில் அறிவியல், விஞ்ஞான பார்வை, புதிய கண்டுபிடிப்புக்கள், அதை செயல்படுத்துவது என பல சாதனைகளை செய்த வரலாற்றில் தமிழன் தொடக்கம் தொட்டே முதன்மையான பங்கு வகித்து வருகிறான்.

 

இந்தியா முழுக்க பசுமையாய் செழிக்க கங்கையையும் காவிரியையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே இருந்து வருகிறது. ஆட்சிகள்தான் மாறியது. இதுவரை ஒவ்வொரு ஆற்றின் அருகே ஓடும் ஆறுகளையோ அல்லது வாய்க்கால்களைக்  கூட இணைக்கவில்லை. ஆனால் ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு தமிழன் நதி நீர் இணைப்பை செயல்படுத்தி பல லட்சம் மக்களுக்கும், விவசாய பூமிக்கும் பாசன நீர் வழங்கி தமிழ் சமூகம் போற்றத்தக்க ஒரு மாமனிதனாக வாழ்ந்துள்ளார் அவர். ஆம் அவர்தான் காளிங்கராயன்.

 

ஈரோடு மாவட்டம் பவானியில் இடதுபுறம் காவேரி ஆறும், வலது புறம் பவானி ஆறும் ஒடுகிறது. இதன் எல்லையான கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆறு காவிரி ஆற்றுடன் கலந்து செல்கிறது. இப்படி பவானி ஆறு காவிரியுடன் கலக்கும் அரை கிலோ மீட்டருக்கு முன்பு ஒரு அணையை கட்ட முடிவெடுத்த காளிங்கராயன், அணை கட்டுவதற்கு முன்பே காவிரி ஆறு செல்லும் பகுதியையொட்டி வாய்கால் வெட்ட ஆரம்பித்தார். லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய விளைநிலம் பயன்பெறும் வகையில் பவானியில் இருந்து ஈரோடு மற்றும் கொடுமுடி வரை சுமார் 57 கிலோ மீட்டர் நெளிந்து, வளைந்து, மேடான பகுதிக்கும் நீர்ஏறிச் செல்வது போல் அமைத்து வாய்காலைவெட்டி முடித்து வாய்க்காலின் கடைகோடி நீர் கொடுமுடியை தாண்டி செல்லும் நொய்யல் ஆற்றில் கலக்கும் வகையில் உருவாக்கினார்.

 

ஏறக்குறைய பத்து பதினைந்து ஆண்டுகளாக இந்த வாய்கால் வெட்டப்பட்டிருக்கிறது. இதற்கான செலவு எல்லாவற்றையுமே காளிங்கராயனே செய்துள்ளார் என்பதுதான் ஆச்சியரியமான அபூர்வமான செய்தி. இறுதியில் வாய்க்கால் வெட்டப்பட்டு பவானியில் ஆற்றில் அணையை கட்டி அந்த இடத்திற்கு அணைக்கட்டு என பெயர் வைக்கப்பட்டு ஜனவரி 18ந் தேதி காளிங்கராயன் வெட்டிய வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. 

 

இப்படிப்பட்ட நீர் விஞ்ஞானியான காளிங்கராயனுக்கு அணைக்கட்டு பகுதியில் மணிமண்டபம், வெள்ளோடு பகுதியில் சிலை, ஒவ்வொரு வருடமும் ஜனவரி 18 அன்று அரசு சார்பில் மரியாதை என கலைஞர் முதல்வராக இருந்த போதிருந்தே நடந்துவருகிறது. இவ்வருடமும் அரசு சார்பில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, அரசு கேபிள் வாரிய தலைவர் குறிஞ்சி சிவக்குமார் உட்பட எம்.எல்.ஏ.க்கள் பலரும் கலந்து கொண்டு மலர் மரியாதை செலுத்தினார்கள். 

 

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறும்போது, "1283 ஆம் ஆண்டு இதே தினத்தில் பவானி ஆற்றை தடுத்து காளிங்கராயன் அணை கட்டி 57 கிலோ மீட்டர் தூரம் பாசன பகுதியை உருவாக்கி நொய்யல் ஆற்றில் வாய்க்காலை இணைத்தவர் காலிங்கராயன். எந்த விஞ்ஞான வளர்ச்சியும், தொலைத்தொடர்பு சாதனமும் இல்லாத காலத்திலேயே நதிநீர் இணைப்பை சாத்தியப்படுத்திக்காட்டியுள்ளார் காலிங்கராயன். அவரது புகழை போற்றும் வகையிலேயே காளிங்கராயர் தினம் தமிழக அரசால் கொண்டாடப்படுகிறது" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.