வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலையின் ஒருப்பகுதியில் அணைக்கட்டு தொகுதிக்குள் அமிர்தி வன உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பூங்காவோடு சேர்த்து மான் போன்ற விலங்குகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து சுத்தி பார்த்துவிட்டு பொழுதை கழித்துவிட்டு செல்வர்.

ஜவ்வாதுமலை என்பது ஒருக்காலத்தில் சந்தனமரத்துக்கு பெயர் போனது. தரமான ஜவ்வாதுமலை சந்தனமர விற்பனைக்காகவே திருப்பத்தூரில் சந்தன மர குடோன் மிகப்பெரிய அளவில் இருந்தது. 25 வருடங்களுக்கு முன்பு அந்த குடோன் தீ பிடித்து எரிந்து போனது ஒருப்புறம், ஜவ்வாதுமலையில் இருந்த சந்தன மரங்களை திருட்டு தனமாக வெட்டியதால் 80 சதவிதம் சந்தனமரம்மில்லா மலையாகவுள்ளது. சிலயிடங்களில் மட்டும் சிலச்சில மரங்கள் நீண்ட ஆண்டுகளாக உள்ளது.
அந்த மரங்களோடு சேர்த்து கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் ஜவ்வாதுமலையில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நவம்பர் 5ந்தேதி விடியற்காலையில், அமிர்தி வன உயிரியல் பூங்காவுக்கு அருகில் உள்ள சில சந்தனமரங்களை வெட்டி கடத்த ஒரு கும்பல் முயன்றது. இந்த தகவல் கிடைத்து அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் அடங்கிய குழு, சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற கும்பலை மடக்கியது.
வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்த முயல, அதையும் மீறி அந்த கும்பலை சேர்ந்த 14 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 14 பேரிடமும் ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் வெட்டுவதற்கு பயன்படுத்திய இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள், இந்த குழுவுக்கு தலைமை யார் ?, இவர்களின் பின்புலம் என்ன ? இந்த மரங்கள் பற்றி யார் தகவல் சொன்னது உட்பட பல தகவல்களுக்காக அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.