தூத்துக்குடியில் மகாகவி பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு மகாகவி பாரதியார் இலக்கியப் பேரவை நடத்திய விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ''சீதை அனுமானிடம் கேட்கிறார், 'அனுமனே உங்களுக்கு என்ன பைத்தியமா? செந்தூரத்தை எடுத்து; காவியை எடுத்து உடல் முழுவதும் பூசிக் கொள்கிறாயே' என்று கேட்ட பொழுது அனுமன் சொல்கிறான், நெற்றியில் காவி வைத்தாலே தலைவனுக்கு நல்லது என்றால் உடல் முழுவதும் காவியை; செந்தூரத்தைப் பூசிக் கொண்டால் ராமனுக்கு எவ்வளவு நல்லது நடக்கும் .அதனால் நான் பூசிக் கொள்கிறேன் என்றார் அனுமன்.
உடனே தமிழிசை காவியைப் பூசிக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்; காவியைப் பற்றித்தான் பேசுகிறார்; ஆளுநராக இருந்து கொண்டு காவியைப் பற்றிப் பேசலாமா? என்று சிலர் சொல்வார்கள். நிச்சயமாக நமது தேசியக் கொடியின் முதன்மையான நிறமாகக் காவி நிறம் இருக்கிறது. அதனால் தேசப்பற்று உள்ளவர்கள் யாரும் காவியை மறந்து விட்டு தேசப்பற்றை முன்னிறுத்தி விட முடியாது'' என்று பேசினார்.