Skip to main content

தலைமை தேர்தல் அதிகாரி தமிழக அரசு கட்டுப்பாட்டில் நீடிக்கக்கூடாது! அன்புமணி ராமதாஸ்

Published on 24/04/2018 | Edited on 24/04/2018
Anbumani Ramadoss


தலைமை தேர்தல் அதிகாரி தமிழக அரசு கட்டுப்பாட்டில் நீடிக்கக்கூடாது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில்  பணியாற்றி வரும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனராகவும் நீடிக்கிறார். இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது என்பது மட்டுமின்றி, தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியின் நம்பகத்தன்மையையும் சீர்குலைத்து விடும்.
 

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்த இராஜேஷ் லக்கானி அப்பதவிலிருந்து  தம்மை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டதையடுத்து, அவருக்கு பதிலாக புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யப்பிரதா சாகு கடந்த 22.02.2018 அன்று நியமிக்கப்பட்டார். ஆனாலும், உடனடியாக  தலைமைத் தேர்தல் அதிகாரி பொறுப்பை ஏற்றுக் கொள்ளாத சாகு, மூன்று வாரங்கள் கழித்தே புதிய  பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால், அடுத்த சில வாரங்களில் தாம் ஏற்கனவே வகித்து வந்த சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் பதவியையும் கூடுதலாக கவனித்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார். இதற்கு தேர்தல் ஆணையமும் ஒப்புதல் வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
 

ஒரு மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி பதவி என்பது மிகவும் முக்கியமான பொறுப்பாகும். சம்பந்தப்பட்ட மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? அந்த மாநிலத்திலிருந்து மக்களவைக்கு   செல்லவிருக்கும் உறுப்பினர்கள் யார்? என்பதைத் தீர்மானிப்பதற்கான தேர்தல்களை நடத்தும் முக்கியமானப் பொறுப்பு அவரிடம் தான் ஒப்படைக்கப்படுகிறது. அத்தகையப் பதவியில் இருப்பவர்கள் அனைத்துக் கட்சிகளின் நம்பிக்கையை பெற்றவர்களாகவும், நடுநிலை தவறாதவர்களாகவும் இருக்க வேண்டும்.  நம்பகத்தன்மை சிறிதளவு குலைந்தாலும் கூட அவர்கள் நடத்தும் தேர்தல்  நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடந்தது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படாது. இது ஜனநாயகத்திற்கு தோல்வியாக அமைந்து விடும்.
 

இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக அமர்த்தப்பட்ட ஒருவரை, சென்னைக் குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் பதவியையும் கூடுதலாக வழங்கி  தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தமிழக ஆட்சியாளர்கள் துடிப்பது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. சென்னைக் குடிநீர் வாரியத்திற்கு அவரது சேவை கண்டிப்பாகத் தேவைப்படுவதாகவும், இதற்காக அடுத்த 3 மாதங்களுக்கு அவரை மாநில அரசு பணியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டதாகவும், அதை  ஆணையம் ஏற்றுக் கொண்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற வகையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

சென்னைக் குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் வாரிய இயக்குனர் பதவியை கவனிக்க தமிழகத்தில் தகுதியான இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளே இல்லை என்பது போன்றும், அப்பணிக்கு  சத்யப்பிரதா சாகு மட்டும் தான் அதற்குத் தகுதியானவர் என்பது போன்றும் ஒரு தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. முதன்மைச் செயலாளர் நிலையில் வெ.இறையன்பு உள்ளிட்ட பல அதிகாரிகள் முக்கியத்துவம் இல்லாத பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களை சென்னைக் குடிநீர் வாரியத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராகவே நியமிக்க முடியும். செயலாளர் நிலையில் உதயச்சந்திரன், தேவ் ராஜ் தேவ் உள்ளிட்ட பல அதிகாரிகளும் அவர்களின் திறமைக்கு ஏற்பில்லாத பணியிடங்களில் உள்ளனர். அவர்களை சென்னைக் குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனராக அமர்த்தலாம். சென்னைக் குடிநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தவர்களில் மிகச்சிறப்பாக பணியாற்றியவர் என்ற பாராட்டைப் பெற்றிருந்த அருண்ராய், கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டு முக்கியத்துவம் இல்லாத மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
 

அருண்ராய் நேர்மையாக இருந்தார்;  முறைகேடுகளுக்கு துணைபோக மறுத்தார் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.  ஊழலுக்கு துணை போக மறுத்ததற்காக மாற்றப்பட்ட நேர்மையான அதிகாரி இருந்த இடத்தில் சத்யப்பிரதா சாகுவை அடுத்த 3 மாதங்களுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அழுத்தம் கொடுக்கிறது என்றால் அது கண்டிப்பாக நல்ல விஷயத்திற்காக இருக்க வாய்ப்பில்லை. சத்யப்பிரதா சாகு இதுவரை எந்தக் குற்றச்சாற்றுகளுக்கு உள்ளாகாதவர் என்பது உண்மை தான். ஆனால், அவரை இயக்குபவர்கள்  நேர்மையற்றவர்கள் என்பதால், அவர்கள் விருப்பப்படி செயல்படுபவர்களையும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
 

தலைமைத் தேர்தல் அதிகாரியாக பதவி வகிப்பவர்கள் தமிழகத்தைச் சேராதவர்களாக மட்டுமின்றி,  தமிழகத் தொகுப்பைச் (Cadre) சேராதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதுபற்றி தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நசீம் ஜைதியிடம் மனு அளித்துள்ளேன். அதற்கு மாறாக, தலைமைத் தேர்தல் அதிகாரியையே ஓர் ஊழல் அமைச்சரின் கீழ் பணியாற்ற தேர்தல் ஆணையம் அனுமதித்தால், தலைமைத் தேர்தல் அதிகாரியின் செயல்பாடுகளில் அமைச்சரின் குறுக்கீடு இருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இது சத்யப்பிரதா சாகு தலைமையில் நடத்தப்படும் தேர்தல்கள் மீது ஐயத்தையே ஏற்படுத்தும். இதைத் தடுக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.
 

எனவே, சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் பதவியிலிருந்து சத்யப்பிரதா சாகுவை உடனடியாக விடுவித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பணியை மட்டும் கவனிக்கும்படி ஆணையம் உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் தலைமைத் தேர்தல் அதிகாரி பணியிலிருந்து சாகுவை விடுவித்து, அப்பணியில் அப்பழுக்கற்ற வரலாறு கொண்ட இ.ஆ.ப. அதிகாரியை ஆணையம் அமர்த்த வேண்டும்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.