Skip to main content

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஆற்காடு சுரேஷ் மனைவி கைது!

Published on 19/08/2024 | Edited on 19/08/2024
Armstrong case Arcot Suresh wife arrested

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யச் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். அதே சமயம் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட சுமார் 200 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் ஜூலை 14ஆம் தேதி அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் 24வது நபராக பொற்கொடி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஆந்திரா மாநிலத்தில் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பொற்கொடி கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி ஆவார். இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பொன்னை பாலுவுக்கு பொற்கொடி ரூ.1.5 லட்சம் கொடுத்தது தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட பொற்கொடிக்கு செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 24 பேரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்