
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி இருந்தது. இதன் மூலம் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது.
தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவருக்கான பட்டியலில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பா.ஜ.க. சட்டமன்ற குழுத் தலைவரும், அக்கட்சியின் மாநில துணைத்தலைவரான நயினார் நாகேந்திரன் ஆகியோர் உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் மத்திய உள்துறை அமைச்சர் 2 நாள் பயணமாக நேற்று (10.04.2025) இரவு 10.20 மணியளவில் சென்னை வருகை தந்தார்.
கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள அமித்ஷா இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார் என்று கூறப்படுகிறது. முன்னதாக இன்று காலை 35க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். கூட்டணிக் கட்சித் தலைவர்களிடமும் அமித்ஷா ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் காலமான குமரி அனந்தனின் மகள் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அமித்ஷா தற்போது சென்றுள்ளார். இதன் பின்னர் அங்கிருந்து ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டிற்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.