Skip to main content

அதிமுக அரசுக்கு புகழ் கிடைத்துவிடும் என்பதால்தான் எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன: எடப்பாடி பழனிசாமி 

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
Edappadi K. Palaniswami



எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றினால் அதிமுக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்பதால்தான், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அத்திட்டத்தை எதிர்க்கின்றன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தெரிவித்தார்.


சேலம் & பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சேகோ சர்வ் அருகே 22 கோடி ரூபாயில் புதிதாக மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாள்களாக இப்புதிய மேம்பாலத்தில் சோதனை ஓட்டம் நடந்தது வந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமையன்று (18.11.2018) அதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.


அதையடுத்து, 55.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தும், பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியும் சிறப்புரை ஆற்றினார். விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியது:


சேலம் மாவட்டம் அரியானூர், மகுடஞ்சாவடி ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தவிர்க்க, உயர்மட்ட பாலம் அமைக்கக் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அனுமதி  அளித்துள்ளார். இப்பகுதிகளில் பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.


நாள்தோறும் வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதனால் ஏற்படும் சாலை விபத்துகளின்போது ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அவற்றை தடுப்பதே அரசின் நோக்கம். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிந்த பிறகு, சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டப்பணிகள் தொடங்கப்படும். இந்த சாலை சேலத்திற்கு மட்டுமின்றி, மதுரை, கோவை,  கேரளா செல்லவும் பயன்படும். 


சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை அமைவதன் மூலம் 70 கி.மீ. வரை பயண தூரம் குறைகிறது. அதனால் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையின் அளவும் குறைவதால், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். இதுபோன்ற நல்ல  திட்டங்கள் வரும்போது அவற்றை வரவேற்க வேண்டும். 


முக்கியமான திட்டம் என்பதால் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து நிலங்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும். எதிர்க்கட்சிகளும் அரசின் வளர்ச்சித் திட்டங்களை செயலாக்க ஒத்துழைக்க வேண்டும். இந்த புதிய திட்டத்தினால் அதிமுக அரசுக்கு புகழ் கிடைத்துவிடும் என்பதால்தான் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து வருகின்றன.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்றே, அவர் வழியில் அமைந்த இந்த அரசும் பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இளைய தலைமுறையினர் விஞ்ஞானக் கல்வியறிவை வளர்த்துக்கொள்ளும் வகையில் இதுவரை 38 லட்சம் பேருக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டில் மேலும் 15 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது. 


சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாள்தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு கிடைத்திடும் வகையில் 110 கோடி ரூபாயில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் ஓராண்டில் முடிக்கப்படும். 


விலைவாசி உயர்வைக் கருத்தில்கொண்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள காலியிடங்களில் காய்கறி தோட்டம் அமைக்க இலவசமாக விதைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாகத் திகழ தேவையான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.