
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் திமுக கூட்டணி அதிக வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது.
138 நகராட்சிகளில் திமுக கூட்டணி 131 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பேரூராட்சிகளை பொறுத்தவரையில் திமுக கூட்டணி 394 இடங்களிலும், 17 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்த உள்ளாட்சி சேர்தலில் பல்வேறு அதிரடியான காட்சிகள் அரங்கேறி வருகிறது. ஒரு ஓட்டில் வேட்பாளர்கள் வெற்றிபெறுவதும், ஒரு ஓட்டில் வேட்பாளர்கள் தோல்வி அடைந்த சம்பவங்களும் அதிகம் நிகழ்ந்துள்ளன. இதன் உச்சக்கட்டமாக மதுரை மாவட்ட மேலூர் நகராட்சி 9வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அருண் சந்திர பிரபு வெற்றி சான்றிதழை வாங்கிய 10 நிமிடத்தில் திமுகவில் சேர்ந்து அதிமுகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.