Skip to main content

தி.மு.க.வின் கபடநாடகம் மக்களிடம் பலிக்காது... -அமைச்சர் சீனிவாசன்

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

ADMK minister dindigul srinivasan speech admk dindigul election booth committee

 

 

தி.மு.க.வின் கபடநாடகம் மக்களிடம் பலிக்காது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சட்டமன்றத் தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 

அதன்பின் அவர், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மக்கள் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத பல்வேறு பயனுள்ள திட்டங்களை தந்துள்ளனர். சிறப்பான ஆட்சி மூலம் தமிழ் மக்களின் முழுமையான ஆதரவு நமக்கு உள்ளது. தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. புயல் மழை வெள்ளம் என இயற்கை சீற்றம் நடைபெறும் இடங்களுக்கு முதலமைச்சரே நேரடியாக சென்று களப்பணியில் ஈடுபட்டு வருகிறார். 
 

 

தி.மு.க. நீட் தேர்வு கொண்டுவந்தது; தி.மு.க. அங்கம் வகித்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிதான். ஆனால், தற்போது நீட் தேர்வை எதிர்ப்பது போல தி.மு.க.வினர் நடிக்கின்றனர். தி.மு.க.வின் கபடநாடகம் மக்களிடம் பலிக்காது. நீட் தேர்வை ஒருபோதும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை முதலமைச்சர் கொண்டுவந்தார். இதன் மூலம் 369 ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி, அவர்களின் கல்விக் கட்டணத்தை தமிழக அரசே ஏற்று ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 
 


ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ஊழல் செய்த ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை தினந்தோறும் நடந்துவருகிறது. இது போன்று பல்வேறு ஊழல் வழக்குகள் தி.மு.க. மீது உள்ளது. எனவே ஊழலைப் பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை. 

 

உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழகம் 6-வது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. நீர் மேலாண்மையில் தமிழகம் சிறப்பான இடத்தில் உள்ளது. இதனால் தமிழக அரசு, மத்திய மந்திரி அமித்ஷாவே பாராட்டினார். இதேபோல், கல்வி, அறிவியல், நிர்வாகம் என அனைத்து துறைகளிலும் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது. எனவே, வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்; எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதலமைச்சர் ஆவார். இதற்கு நாம் அனைவரும் தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.