Skip to main content

புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏக்கள் நியமித்திற்கு தடைகோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு! 

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

Adjournment of judgment in the case seeking ban on the appointment of 3 nominated MLAs in Pondicherry

 

புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் நியமித்துக்கு  தடை  கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

 

புதுவை சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை கைப்பற்றிய என்ஆர் காங்கிரஸ் - பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

 

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 10ஆம் தேதி கொரோனா பாதித்து, சென்னை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி சட்டமன்றத்திற்கு கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகிய மூவரை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் இந்த உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக்கோரி புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

 

அந்த மனுவில், புதுவை முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களும் பதவி ஏற்காத நிலையில் 3 நியமன நிர்வாகிகளை நியமிக்க எந்த அவசரமும் இல்லை என்று  தெரிவித்து இருக்கிறார்.

 

சட்டப்படி, பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்களை நியமித்துள்ளது மோசமானது என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

 

அரசியல் சாசன மரபுப்படி நியமன எம்எல்ஏக்கள் நியமனம் தொடர்பாக, மாநில அமைச்சரவை, துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரையை வழங்கும் எனவும், ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நியமன உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் இந்த நடைமுறை தற்போது பின்பற்றப்படாததால், 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனம் தொடர்பான உத்தரவை செல்லாது என அறிவித்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசுப் பணியில் இருப்பவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தடை உள்ளதாகவும், இவர்கள் நியமனத்தில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனவும் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணனும் வாதிட்டார்.

 

அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்த மனுவை ஏற்க கூடாது என நியமன எம்.எல்.ஏ.க்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்