Skip to main content

“மக்கள் அளிக்கும் கோரிக்கைகளை திமுக கண்டிப்பாக நிறைவேற்றும்” - கனிமொழி எம்.பி

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
 DMK will definitely fulfill the demands of the people  says  Kanimozhi MP

2024 மக்களவை தேர்தலையொட்டி, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தப் பயணத்தில் தமிழ்நாட்டு மக்களின் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் பெறப்பட்டு, அதனை நாடாளுமன்றத்தில் ஒலித்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக திமுக சார்பில் கனிமொழி எம்.பி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டனர்.

இன்று (23/02/2024) வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பேபி மஹாலில் நடைபெற்ற நிகழ்வில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பரிந்துரைகளை அளித்தனர். திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவரும்,திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கனிமொழி பேசும்போது, “திமுக தேர்தல் அறிக்கை எப்போதும் மக்களுடைய அறிக்கையாக இருக்கும் என்பதற்குத் தான் தலைவர் கலைஞர் அவர் காலம் முதல் இன்று நம்முடைய திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரை தொடர்ந்து மக்களைச் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு, அந்த கருத்துக்களைப் பதிவு செய்து  அதைத் தேர்தல் அறிக்கையை உருவாக்க வேண்டும் என்று கட்டளையிட்டர்.  

ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிக்கை உருவாக்கப்படும் போது, மக்களைச் சந்தித்து அவர்களுடைய விவரங்களை உள்வாங்கி உருவாக்கப்படுவதுதான் தி.மு.கவின் தேர்தல் அறிக்கை. அதன்படி, நாங்கள் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, அங்கே இருக்கக்கூடிய விவசாய மக்கள், தொழிலாளிகள், தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர், மாணவர்கள் என்று பல்வேறு துறைகளைச் சார்ந்த மக்களைச் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு, தேர்தல் அறிக்கை உருவாக்கக் கூடிய பணியில் ஈடுபட்டு இருக்கின்றோம்.  

 DMK will definitely fulfill the demands of the people  says  Kanimozhi MP

உங்களுடைய கோரிக்கைகளை, உங்களுடைய கருத்துக்களை, நீங்கள் எங்களுக்குக் கொடுக்கக்கூடிய அறிவுரைகளை, நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, அதனை பரிசீலித்து, நம்முடைய முதலமைச்சர் அவர்களிடமும் கலந்துரையாடித் தேர்தல் அறிக்கையை உருவாக்க இருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் தான் இந்த நாட்டின் தலையெழுத்தை, இந்த நாட்டின் இன்றைய  நிலையை மாற்றிக் கட்ட முடியும் என்ற அந்த நம்பிக்கையோடு வந்து இருக்கக்கூடிய உங்கள் அத்தனைப் பேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தல் அறிக்கை குழு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறது . பல்வேறு துறைகளைச் சார்ந்த மக்களிடம் குறைகள் கேட்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் ஒருங்கிணைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளோம். மக்கள் அளிக்கும் கோரிக்கைகளை திமுக கண்டிப்பாக நிறைவேற்றும்” என்றார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் 20% கூட நிறைவேற்றப்படவில்லையே என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு? முதலில் பிரதமர் மோடி ரூ.15 லட்சம் அனைவருக்கும் வங்கிக் கணக்கில் அனுப்புவதாக தெரிவித்தார். அதை பிரதமர் மோடி அனுப்பிய பிறகு அண்ணாமலை விமர்சிக்க உரிமை உண்டு என பதிலளித்தார்.

திமுக அதிகமாக தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது என கேட்டதற்கு, “இந்தியாவில் எல்லா கட்சிகளும் 50% கூட தேர்தல் பத்திரம் வாங்வில்லை. பாஜகவில் தான் அதிக அளவில் பத்திரம் வாங்கியுள்ளார்கள். அவர்கள் யாரும் குற்றம் சொல்ல முடியாது. தன்னுடைய கட்சிப் பணத்தை கொண்டு வருவதற்காக பாஜக தவறான சட்ட வடிவம் கொண்டு வந்துள்ளது. விவசாயிகளின் போராட்டத்தை இந்த மத்திய அரசு குற்றச் சம்பவங்களைப் போல நடத்தி வருகிறது. கண்ணீர் புகை குண்டு , கம்பிகளைக் கொண்டு அச்சுறுத்தி வருகிறது. விவசாயிகள் நியாத்துக்காக போராடி வருகிறார்கள். ஆனால் பாஜக அரசு அதைக் கேட்க மனதில்லை அவர்களை எதிர்த்து ஊடகங்கள் குரல் எழுப்பினாலும் அவர்களை கூட நசுக்குகிறது” என்றார்.

செய்யாறு அருகில் சிப்காட் வேண்டாம் என பொதுமக்கள் போராடி வருகின்றனர் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இதுகுறித்து நான் முதல்வரை சந்திக்கும்பொழுது விவரங்களை தெரிவிப்பேன். போராடும் விவசாயிகளை சந்தித்து விரைவில் சரியான  நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.