![Love marriage in vilupuram incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/Vvhmjcx0RgJ4mCVMpHMsnrovmtzELBNac7gwLjSuy8E/1656417658/sites/default/files/inline-images/j54.jpg)
காதலியுடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திருமணத்திற்கு இரண்டு நாட்களே உள்ளபோது காதலி வேறு ஒருவருடன் சென்று விட்டதால் பெற்றோர் உறவுக்கார பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்த நிலையில் இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள நாபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன் என்பவரின் மகன் குமரேசன். இவருக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 23ஆம் தேதி பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. ஆனால் திருமணத்திற்கு முன்பாக கடந்த 20ஆம் தேதி மணப்பெண் வேறு ஒரு இளைஞருடன் சென்றுவிட்டதால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார் குமரேசன்.
திட்டமிட்டபடி மகனுக்குத் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக குமரேசனின் பெற்றோர் உறவுக்காரப் பெண் ஒருவரை 23 ஆம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லையே என மனமுடைந்த நிலையில் குமரேசன் கடந்த 25 ஆம் தேதி அவர்களுக்குச் சொந்தமான வயலில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்கொலை செய்வதற்கு முன்பாக குமரேசன் தற்கொலை குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ''தன்னை காதலித்த பெண் தன்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அவரை மறந்தாலும் பழகிய நினைவுகளை மறக்க முடியவில்லை. நான் பதிவிடும் இந்த வீடியோவை வாட்ஸ் அப் குழுக்களில் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன். காரணம் அப்போதுதான் பெண்கள் இதுபோன்று நேசித்தவர்களை விட்டுச் செல்ல மாட்டார்கள்'' என உருக்கமாகப் பேசியுள்ளார்.