Skip to main content

தந்தையுடன் சேர்ந்து 15 வயது சிறுவன் செய்த கொடூரம்! 

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

15 years kid and his father arrested by salem police

 

இடைப்பாடி அருகே, அடமானம் வைத்த தனது நிலத்தை வாங்கியதால் ஆத்திரம் அடைந்த தந்தையும், 15 வயதான சிறுவனும் நிலத்தை வாங்கிய நபரையும், அவருடைய உறவினரையும் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள கலர்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (43). இவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்காரர் மாதேஷ் என்பவரிடம் தனக்குச் சொந்தமான 30 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கியிருந்தார். பல ஆண்டுகள் கடந்த பின்னரும் கடன் தொகை மற்றும் வட்டியைத் தராமல் இருந்துள்ளார். நிலத்தை மீட்கவும் முருகன் எந்த முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. இதனால் தன்னிடம் அடமானம் வைத்த நிலத்தை விற்பனை செய்யப்போவதாக மாதேஷ் கூறியுள்ளார். ஆனால் நிலத்தை விற்கக்கூடாது என்று முருகன் பிரச்சனை செய்து வந்துள்ளார். 

 

இந்நிலையில், உள்ளூரைச் சேர்ந்த தவசியப்பன் மகன் செல்வராஜ் (49) என்பவருக்கு, அக். 26ம் தேதி, அந்த நிலத்தை மாதேஷ் விற்பனை செய்துள்ளார். ஏற்கனவே இந்த நிலம் தொடர்பாக தனக்கும், மாதேஷூக்கும் பிரச்சனை இருப்பது தெரிந்து இருந்தும், செல்வராஜ் அந்த நிலத்தை வாங்கியதால் அவர் மீது முருகன் கடும் ஆத்திரத்தில் இருந்தார். அக். 30ம் தேதி மதியம் செல்வராஜ், அவருடைய உறவினர் கந்தசாமி (69) என்பவருக்கு பயிர்க்கடன் பெறுவதற்காக குறுக்கப்பட்டியில் உள்ள கூட்டுறவு சங்கத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். 

 

கூட்டுறவு சங்கத்தில் பணிகளை முடித்துக் கொண்டு அவர்கள் வாழைக்காயன் தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தனர். அதே வழியில், முருகன் தனது 15 வயது மகனுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்வராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது தனது காரை மோதி கீழே தள்ளினார். கார் மோதிய வேகத்தில் செல்வராஜூம், கந்தசாமியும் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்தனர். காரை விட்டு இறங்கிய முருகனும், அவருடைய மகனும், 'எங்கள் நிலத்தை வாங்கக்கூடாது என்று சொன்னால் கேட்க மாட்டாயா?' என்று உறுமியபடியே, காரில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து இருவரையும் சரமாரியாக குத்தினர். 

 

பலத்த காயத்தால் அவர்கள் அலறிய சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அங்கு ஓடி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் இருவரும் காரில் வேகமாக தப்பிச்சென்று விட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செல்வராஜையும், கந்தசாமியையும் அங்கிருந்தவர்கள் மீட்டு இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக செல்வராஜ், சேலம் அரசு மருத்துவமனைக்கும், கந்தசாமியை தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். இருவருமே சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்தனர். 

 

இதுகுறித்து பூலாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். செல்வராஜை தாக்கும்போது கீழே விழுந்த முருகன் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய மகனை காவல்துறையினர் கைது செய்தனர். சிறுவனை, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். 

 

நிலத்தகராறில் தந்தையும், மகனும் சேர்ந்து இருவரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் இடைப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்