Skip to main content

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
10 Tamil Nadu fishermen arrested

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் வழக்கம் போல் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரைக் கைது செய்தனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கைதான 10 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்களின் விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்து பறிமுதல் செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரைக் கைது செய்யப்பட்டனர். இதனையொட்டி கைது செய்யப்பட்ட 22 மீனவர்களையும், 3 விசைப்படகுகளையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று (24.06.2024) ஒரு நாள அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்