
மது மற்றும் போதை ஒழிப்புக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்தூர்பேட்டையில் அக்டோபர் 2ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடக்க உள்ளது. இந்த மாநாட்டை வடிவமைத்து, முழுமையாக நடத்தி முடிக்கும் பணியை விசிகவிற்காக வாய்ஸ் ஆஃப் காமென் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டையும் பிரமாண்ட முறையில் நடத்தி முடித்தது. இந்த நிறுவனத்தின் தலைவராக உள்ள ஆதவ் அர்ஜீனா தற்போது விசிகவின் துணைப்பொதுச்செயலாளராக இருப்பதால் மாநாட்டுப் பணிகளை நேரடியாக அவரே கண்காணித்து வருகிறார். குடியால் குடும்பங்களை இழந்த பெண்களின் குரல்களை வார்த்தைகளாகப் பதிவு செய்து மாநாட்டு நுழைவு வாயிலில் பதாகைகளாக வைத்திருப்பது சிறப்பான ஏற்பாடுகளில் ஒன்றாகும்.
மேலும், கையெழுத்து இயக்கத்தையும் இந்த மாநாட்டில் விசிக கட்சியினர் துவங்க உள்ளார்கள். தூரத்தில் இருப்பவர்களும் மாநாட்டு நிகழ்வைக் காணப் பிரமாண்ட எல்.இ.டி திரைகள் என நவீனத்துவம் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு மாநாடாக இந்த மாநாட்டை வடிவமைத்துள்ளது வாய்ஸ் ஆஃப் காமென் நிறுவனம். அதிக அளவில் பெண்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளார்கள் என்கிறார்கள் அரசு தரப்பில்.