Skip to main content

பிரச்சாரத்தில் மீண்டும் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின்..!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

udhaynithi stalin arrested in nagapattinam

 

 

இரண்டாவது நாளாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலினை மீண்டும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தி.மு.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார பரப்புரையை நேற்று 20ஆம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளை முன்னாள் தி.மு.க. தலைவர் கலைஞர் பிறந்த வீட்டில் இருந்து தொடங்கினார். காவல்துறையின் அனுமதியை மீறி பிரச்சாரம் செய்ததாக உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார். பின் அவரை மண்டபத்தில் அடைத்து இரவு விடுவித்தனர். அதன்பிறகு தலைஞாயிறு, செம்போடை, வேதாரண்யம், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றார். அகஸ்தியம்பள்ளியில் உப்பள தொழிலாளர்களை சந்திக்க சென்றவரை அங்கு போலீஸார் தடுத்து நிறுத்தினர். கே.என்.நேரு, ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்ட முக்கிய தி.மு.க.வினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதத்திற்கு பிறகு மூன்று வாகனங்களை மட்டும் அனுமதித்தனர். முதல்நாள் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு வேளாங்கண்ணிக்கு வந்தவர் இரண்டாம் நாள் பிரச்சாரத்தை இன்று துவங்கினார்.

 

நாகை அக்கரைபேட்டை மீன் பிடி துறைமுகத்தில் காவல்துறையினரின் தடையை மீறி உதயநிதி ஸ்டாலின் மீனவர்களை சந்தித்தார்.  தொடர்ந்து மீனவர்களோடு படகில் பயணம் செய்த உதயநிதி, மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

 

இந்த நிலையில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அடுத்த இடத்திற்கு கிளம்பியவரை தடுத்து நிறுத்திய போலீசார் அதிரடியாக கைது செய்தனர். உதயநிதியின் கைது சம்பவத்தை கண்டித்து அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினரும், மீனவர்களும் தரையில் படுத்தும், வாகனத்தை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால், தி.மு.க.வினருக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.

 

கைது செய்தபின் வாகனத்தில் இருந்தபடியே செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “என்னுடைய பிரச்சாரத்தை கண்டு அ.தி.மு.க. அரசு பயப்படுகிறது. ஆட்சி மாற்றம் வரப்போவது உறுதி. என்னுடைய பிரச்சாரத்தை தடுக்கும் வகையில் கைது செய்கிறார்கள். குறைவான நபர்களே பங்கேற்ற எங்களை கைது செய்கிறார்கள். ஆனால் பீஹார் தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா, மோடி, கலந்து கொண்டார்கள், அவர்களை கைது செய்யவில்லை. தற்போது எங்கள் பிரச்சாரத்தை ஒடுக்கவே கைது செய்கிறார்கள். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தலைவரிடம் பேசி முடிவெடுப்போம். விடுதலை செய்தார்கள் என்றால் இன்றைய நிகழ்ச்சிகளை மீண்டும் தொடர்ந்து நடத்துவேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாகை - காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Passenger ferry service between Nagai Kangesan again
கோப்புப்படம்

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மழையைக் காரணம் காட்டி பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2018) நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இதற்காக இந்தக் கப்பல் மே 10 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்