![Udayanidhi Stalin to visit Cuddalore to provide corona relief fund](http://image.nakkheeran.in/cdn/farfuture/_OtKOfj7WFxduSytG0QRmQ3h3HoLjF1R1ik4AR8M-64/1625285833/sites/default/files/inline-images/th-1_1234.jpg)
திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு உறுப்பினரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (03.07.2021) கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கரோனா நிவாரணப் பொருட்கள், விவசாயிகளுக்கு சாகுபடி தொகுப்புகள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவிகள் ஆகியவற்றை வழங்க உள்ளார்.
கடலூர் கிழக்கு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) காலை முதல் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் உதயநிதி ஸ்டாலின், மதியம் 12.00 மணியளவில் குறிஞ்சிப்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தொகுப்பினையும், அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
அதனைத் தொடர்ந்து கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர், கலைஞரின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு மதியம் 12.30 மணியளவில் வடலூர், மங்கையர்க்கரசி திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரண தொகுப்புகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்து நிவாரணப் பொருட்களை வழங்க உள்ளார்.
![Udayanidhi Stalin to visit Cuddalore to provide corona relief fund](http://image.nakkheeran.in/cdn/farfuture/vHLgHcLBIv3wrGTFK-hHxYf7dGcLsjWjM2C5PXRPCrE/1625285876/sites/default/files/inline-images/th-2_302.jpg)
முன்னதாக, கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று (03.07.2021) காலை 11.00 மணியளவில் வடலூர், வள்ளலார் சபை அருகில், தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.