Skip to main content

“அதிமுக - பாஜக இடையே மறைமுக கூட்டணி” - திருமாவளவன்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024

 

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில்  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் நேற்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டதில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசுகையில், “நானும் ஒரு வேட்பாளர். என்னுடைய பிரச்சாரத்தை இன்னும் சரிவர முடிக்கவில்லை என்றாலும் கூட, திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் சேகர்பாபுவின் அன்புக்கும் கட்டுப்பட்டு இந்த மேடையில் நிற்கிறேன். திமுக 40 தொகுதிக்கு நாற்பதும் வெற்றி பெறுவது நிச்சயம்  என்பதில் மாற்றுக்கருத்தில்லை.  அதிமுகவை வீழ்த்துவது திமுகவிற்கு எளிது.  அப்படி அதிமுக, பாமக, பாஜக என அனைவரும் கூட்டணியில் இருந்த போதே, வீயூகம் அமைத்து வெற்றி வாகை சூடியவர் முதல்வர் ஸ்டாலின்.

இந்த சூழ்நிலையில்  இந்த கட்சிகள் தனித்து  கூட்டணி  அமைத்து தற்போது களம் காணுகிறார்கள். அனால் அவர்களுக்கு தெரியாதா என்ன?  அனைவரும் சேரந்து கூட்டணி வைத்தே போதே தோற்றுப்போனோம். தற்போது தனித்து  களம் கண்டால் தோற்றுப் போவோம் என தெரியாதா? இருந்த போதிலும் தெரிந்தும், பாஜக வியூகத்தில் கூட்டணி அமைத்து களம் காணுகிறார்கள். சென்றமுறை அதிமுகவிற்கு விழவேண்டிய வாக்கை திமுக பெற்றது.

அதற்கு காரணம் அதிமுக பாஜக கூட்டணியே. அதனால் இந்த முறை அதிமுக, பாஜகவை கழட்டிவிட்டு நிற்கிறார்கள். ஆனால் அதுவும் இவர்களுக்குள்ளே மறைமுக  கூட்டணிதான். அதனால்தான் எடப்பாடி மோடியை எதிர்க்கமாட்டார். எதிர்த்து எந்த இடத்திலும் பேச மறுக்கிறார். மோடி பிரதமரானதில் இருந்து இன்று வரை, அவர் போட்ட கையொப்பம் அதானிக்கும், அம்பானிக்கும் தானே தவிர, இந்த மக்களுக்கில்லை. இதையெல்லாம் ஏன் எடப்பாடி பேச மறுக்கிறார். வரி ஏய்ப்புக்கு யார் காரணம்? ஜிஎஸ்டி சட்டம் வர யார் காரணம்? நீட் வர யார் காரணம்? இதையெல்லாம் கொண்டுவந்து மக்களை சிரமப்படுத்தியவர் மோடிதான் என எடப்பாடி பேச மறுப்பது ஏன் ?

இதற்கெல்லாம் குரல் எழுப்பியவர் திமுக தலைவர். இந்திய கூட்டணிக்கு வரமாட்டடேன் என்றவர்களை ஒருங்கிணைத்து அமரவைத்தவர் முதல்வர் அவர்கள். எதற்காக இந்த கூட்டணி என்றால் இந்திய அரசியலமைப்பை காக்கவும், சமத்துவத்தை நிலைநிறுத்தவும், இந்த கூட்டணியை உருவாக்கி களம் காண்கிறோம். இவ்வளவு நெருக்கடியிலும் இந்த கூட்டணியை உருவாக்க காரணம் இதுதான். நாட்டு மக்களைப் பாதுகாக்கலாமா வேண்டாமா, இந்த சமூகத்தை பாக்கணுமா? வேண்டாமா? இது ஒரு கருத்துரிமைக்கான தேர்தல். பாசிசத்தை வேரறுக்க வேண்டிய தேர்தல். ஆகையால் இதை வெற்றிபெற்றுக் காட்ட வேண்டும்.

இட ஒதுக்கீடு மூலம் பயன்பெறும் மக்களின் மீது கை வைக்காமல் தடுக்கவேண்டுமானால் முதல்வர் சொன்ன 40க்கு 40 வெற்றியை நிலைநிறுத்த வேண்டும். இட ஒதுக்கீடு வேண்டும் என கேட்கும் பாமக ராமதாஸ், அதே இட ஒதுக்கீட்டை முழுமையாக நிறுத்த வேண்டும் என துடிக்கின்ற மோடியுடன் கூட்டணி வைப்பது. இந்த சமூக மக்களை  அவர்களின்  வீடுகளிலே தாமரை சின்னத்தை வரைய செய்வது. அந்த சமூக மக்களை முட்டளாக மாற்றுவதாகத்தானே அர்த்தம். ஆனால், அதே சமூக மக்களுக்காக நாங்கள் தான் போராடுகிறோம். அவர்கள் எங்களுக்குத்தான் ஆதரவு தரவேண்டும். இதிலிருந்து மக்களை, சனநாயகத்தை , அரசியமைப்பு சட்டத்தை காப்பாற்ற  வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கவேண்டும்” என்றார்.

சார்ந்த செய்திகள்