Skip to main content

அ.தி.மு.க ஆட்சிக்கு கோமா நிலை வந்துவிட்டது: மு.க.ஸ்டாலின்

Published on 03/09/2018 | Edited on 03/09/2018
Stalin condemns the ruling party

திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையில் உடைந்து போயிருக்கும் மதகுகளை நேரில் பார்வையிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். பின்னர், கடம்பா ஏரி, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் உய்யக்கொண்டான் நீட்டிப்பு பாசன கடைமடை விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களுடைய குறைகளையும் கேட்டறிந்தார்.

முக்கொம்பில் உடைந்து போன மதகுகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு அவர், 

இப்பொழுது தமிழகத்திலே நடந்து கொண்டிருக்கக்கூடிய எடப்பாடி தலைமையிலான இந்த ஆட்சி முக்கொம்பு மதகுகள் போலத் தான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த முக்கொம்பு பகுதிகளில் உடைந்திருக்கக்கூடிய இந்த மதகுகளை முன்கூட்டியே தமிழக அரசு ஆய்வு செய்திருந்தால் இதை நிச்சயமாக தவிர்த்திருக்க முடியும். முறையான அறிவிப்பு இல்லாத வகையில் திடீர் என்று தண்ணீரை அதிகமான அளவிற்கு திறந்து விட்ட காரணத்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

எனவே, அரசினுடைய அலட்சியத்தினால் மட்டுமே இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கிறது. எனவே, இதற்கு உடனடியாக எடப்பாடி பழனிசாமி அவர்கள், தார்மீக பொறுப்பேற்றுக்கொண்டு ராஜினாமா செய்திட வேண்டும் என்பது தான் எல்லோருடைய கோரிக்கையாக இருக்கிறது.

 

 

கடந்த 24-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இங்கு வந்து பார்வையிட்டு உடனடியாக இந்தப் பணி முடிவடையும் என்று ஒரு உறுதியை தந்துவிட்டு சென்றிருக்கிறார். ஆனால், இன்னும் 40 சதவிகித பணிகள் கூட முடியாத நிலையிலே தான் இருந்து கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, "காய்ச்சல் சொல்லிக் கொண்டு வருவது கிடையாது, திடீர் என்று வந்து விடுகிறது" என்று ஒரு அறிவுப்பூர்வமான கருத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டிக்கிறார்கள். அவர் சொன்னது எதை காட்டுகிறது என்றால் “ரோம் நகரம் பற்றி எரிகிற நேரத்தில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல”, நீரோ மன்னனுடைய வாரிசு போல, ஒரு அபூர்வமான கருத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

காய்ச்சல் ஏதோ சொல்லாமல் வருகிறது, ஆனால் கமிஷனை பொறுத்த வரையில் சொல்லிக்கொண்டு வந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் இந்த ஆட்சியிலே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மேட்டூர் அணையை பொறுத்தவரையில் கடந்த மாதம் 19-ம் தேதி திறந்துவிடப்பட்டிருக்கிறது. மேட்டுர் அணை திறந்து விடப்பட்டு ஏறக்குறைய 47 நாட்கள் ஆகியிருக்கின்றன. ஆனால், இன்னும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரமுடியாத நிலையில் தான் இருக்கிறது.

இந்த ஆட்சியைப் பொறுத்த வரைக்கும், எடப்பாடி பழனிசாமியை அவர்களை பொறுத்த வரைக்கும் கமிஷனை தூர்வாரிக் கொண்டிருக்கிறார்களே தவிர, கால்வாய்களை தூர்வாரும் நிலையில் இல்லை என்கிற நிலையிலே தான் இருந்து கொண்டு வருகிறது.

ஏறக்குறைய 5000 கோடி ரூபாய் வரையிலே இதில் ஊழல் நடந்திருக்கிறது என்று மிகத் தெளிவாக தெரிகிறது. ஊழலும், மணல் கொள்ளையும் நடைபெற்ற காரணத்தால் தான் இப்பொழுது இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

 

 

ஆகவே, திடீர் என்று காய்ச்சல் வந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள், காய்ச்சல் வருகிறதோ! வரவில்லையோ! இந்த எடப்பாடி தலைமையில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரையிலே ஒரு கோமா நிலையில் தான் இருந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

எனவே, உடனடியாக இதுகுறித்து, முறையான விசாரணை நடத்தி உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது நிச்சயமாக இந்த ஆட்சியில் நடக்காது, என்று நாங்கள் நினைக்கிறோம். எனவே, விரைவில் தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி மலருகின்ற நேரத்தில் இதற்கு முறையான விசாரணை நடத்தப்பட்டு உரியவர்கள் மீது, உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்தியாளர்: நீர் மேலாண்மையில் அக்கறை இல்லாத இந்த ஆட்சிக்கு எதிராக தி.மு.க.வின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

ஸ்டாலின்: தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகம் இந்தப் பிரச்சினையை மக்களிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே சட்டமன்றத்திலே எங்கெங்கு தூர் வாரப்பட்டிருக்கிறது, எவ்வளவு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்ற பட்டியலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே தொடர்ந்து நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

இதுவரையிலே எந்தவித விளக்கமும், மக்களுக்கு இந்த அரசு தெரிவிக்கவில்லை. கொள்ளையடிப்பதிலும், கமிஷன் வாங்குவதிலும் தான் இந்த ஆட்சி திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கிறது. இதன்மீது உரிய நடவடிக்கையை நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.

 

 

செய்தியாளர்: இந்த மாதிரியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இராணுவ உதவியை நாடுவது தான் சரியான முறை, இந்த அரசு இராணுவத்தையும் கூப்பிடாமல், இங்கிருக்கும் வேலையாட்களுக்கு சரியான சம்பளமும் கொடுக்காமல் இருப்பதால், ஒரே தகராறு நிலவுகிறதே?

ஸ்டாலின்: ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக, இங்கு இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோடி கோடியாக பணம் கொடுத்து அதன் மூலமாக இந்த ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் தான் ஈடுபட்டிருக்கிறார்களே தவிர வேறு எந்தவிதமான முயற்சியிலும் இந்த ஆட்சி ஈடுபடுவதே இல்லை. 
இவ்வாறு அவர் பேசினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சர்ச்சையில் சிக்கிய ஆ. ராசா; பா.ஜ.க கடும் கண்டனம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
BJP strongly condemned on A. Rasa, caught in controversy again

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசினார்.

அந்த வகையில் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. 2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் எனக் கருதி உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதனையடுத்து, திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா, சமீபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தியா ஒருபோதும் ஒரு நாடாக இருந்ததில்லை. இந்தியா ஒரு துணைக் கண்டம். தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்று பிரதமர் கூறுகிறார். தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது. பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் இருக்காது. அரசியல் சட்டம் இல்லையென்றால், இந்தியா இருக்காது. இந்தியா இல்லையென்றால் தமிழ்நாடு தனியாகப் போய்விடும். 

நீங்கள் சொல்லுகின்ற ஜெய் ஸ்ரீராமையும், ‘பாரத் மாதா கி ஜே’யையும் நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று கூறியிருந்தார். இது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

ஆ. ராசாவின் பேச்சுக்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “இந்தியாவின் அடையாளத்தை இழிவுபடுத்துவதும், இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் இந்து கடவுள்களை அவமதிப்பதும் இந்தியா கூட்டணியின் அரசியல் செயல்திட்டமாக மாறி வருகிறது. ஆ. ராசாவின் இத்தகைய கருத்துகளுடன் உடன்படுகிறார்களா? என்பதை காங்கிரஸும், இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் சொல்ல வேண்டும்” என்று கூறினார். 

Next Story

“பெரிய கட்சியான பா.ஜ.க வாக்குகளைத் திருடிவிட்டது” - அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Arvind Kejriwal condemns chandigarh mayor election

சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கடந்த மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட்டன. காலை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பிற்பகல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. 

அதில் மொத்தமுள்ள 36 ஓட்டுகளில், 16 ஓட்டுகள் பெற்று பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதில் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து, பா.ஜ.க குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக ஆம் ஆத்மி கடுமையாக விமர்சனம் செய்து குற்றம் சாட்டி வருகிறது. மேலும், தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் பேனாவைக் கொண்டு எழுதும் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்தும், சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை கண்டித்தும் டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் பலரை போலீஸ் வீட்டுக் காவலில் வைத்தது. 

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “சண்டிகர் மேயர் தேர்தலை பா.ஜ.க சீர்குலைத்துவிட்டது. இந்த தேர்தல் மிகச்சிறிய தேர்தல் தான். ஆனால், உலகின் பெரிய கட்சியாக இருக்கக் கூடிய பா.ஜ.க, வாக்குகளை திருடி வசமாகப் பிடிபட்டது.  சண்டிகர் போன்ற சிறிய தேர்தலில் அவர்களால் குழப்பத்தை ஏற்படுத்த முடியும் என்றால், சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் எவ்வளவு பெரிய குழப்பத்தை உருவாக்குவார்கள் என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. 

தேர்தல்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அரசியல் கட்சிகள் வரும், போகும். தலைவர்கள் வருவார்கள், போவார்கள், இன்றைக்கு பா.ஜ.க ஆண்டுகொண்டு இருக்கிறது. நாளை வேறு யாராவது ஆட்சி செய்யலாம். ஆனால், ஜனநாயகத்தில் யாரும் விளையாடக்கூடாது. தேர்தலில் விளையாடுபவர்கள் ஜனநாயகத்திலும் விளையாடுவார்கள். பா.ஜ.க.வின் நடவடிக்கைக்கு எதிராக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். இந்த மோசமான சூழ்நிலையில் ஜனநாயகத்தை அழியவிடக்கூடாது” என்று பேசினார்.