Skip to main content

18 பேரும் EPS பக்கம் வந்தால் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? செம்மலை பதில்

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
semmalai



சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தங்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த 3வது நீதிபதி சத்யநாராயணன், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உத்தரவிட்டார்.
 

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. செம்மலை, 
 

எங்களுக்கு சாதமான தீர்ப்பு கிடைக்கும் என்று நாங்கள் எப்போதும் சொன்னதில்லை. நாங்கள் சொன்னதெல்லாம் 18 எம்எல்ஏக்கள் வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்றுதான் சொல்லி வந்தோம். அந்த நியாயமான தீர்ப்பு உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 
 

அவர்கள் மேல்முறையீடு சென்றால்...
 

உச்சநீதிமன்றம் செல்லப்போவதில்லை. தங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி உச்சநீதிமன்றம் சென்றால் அவர்களுக்கு நியாயம் கிடைக்காது. ஏற்கனவே பேரவைத் தலைவர் அதிகாரம் குறித்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கோடு இது இணைக்கப்பட்டால் தீர்ப்பு வருவதற்கு ஆண்டுகள் பல ஆகும். அதுவரை இவர்களுடைய கதி என்ன. அப்படி அந்த தவறை அவர்கள் செய்ய மாட்டார்கள் என்று கருதுகிறேன். கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிக்கிறேன் என்று சொன்னால் அவர்களுடைய தலைவிதி என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
 

18 பேரும் தினகரன் பக்கமே இருந்து இடைத்தேர்தலை சந்திக்க தயார் என்றால்...
 

தாராளமாக சந்திக்கட்டும். எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. இந்த தீர்ப்பை காட்டி காட்டி மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள். இந்த தீர்ப்பை பொறுத்தமட்டில் தினகரனுக்கு மிகப்பெரிய பின்னடைவு. இனிமேல் மக்கள் அவரை நம்ப மாட்டார்கள். அவர் எதிர்பார்த்த செல்வாக்கு மக்களிடமும், தொண்டர்களிடம் கிடைக்காது. அமமுக எதிர்காலத்தில் மெல்ல மெல்ல கரையும். 
 

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒரு சிலரோ, அனைவருமோ அதிமுகவுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
 

சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர்கள் கடந்த ஓராண்டு காலமாக எவ்வளவு மன உளைச்சலில் இருப்பார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. அவர்களுக்கு சம்பளம் இல்லை, படி இல்லை. நிதி இழப்பு ஏற்படுகிறது. பொதுமக்கள் மத்தியில் எம்எல்ஏவாக செயல்பட முடியவில்லை. அதிகாரிகளிடம் மரியாதை இல்லை. பொதுமக்களிடம் மரியாதை இல்லை. இது அவர்களாகவே ஏற்படுத்திக்கொண்டது. அவர்கள் மனம் திருந்தி வந்தால், எங்கள் தலைமை ஏற்றுக்கொள்ள பரிசீலிக்கும், தலைமை அவர்களை ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். தினகரனை நம்பி ஏமாறப்போகிறார்களா. தவறை உணர்ந்து திருந்த போகிறார்களா என்று பார்ப்போம். 
 

மறுவாழ்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றால் 18 பேருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா?
 

அது என்னால் சொல்ல முடியாது. காரணம். தேர்தல் நேரத்தில் தலைமை முடிவு எடுக்க வேண்டியது. அந்த உத்திரவாத்தை கொடுக்க முடியாது. நிபந்தனைகளோடு இணைவதற்கு வருவார்களேயானால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். இவ்வாறு கூறினார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு சீட்டை டி.டி.வி.தினகரன் காலில் விழுந்து பெற்றிருக்கிறார்” - தங்க தமிழ்ச்செல்வன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thanga tamilselvan was severely criticized by T.D.V.Thinakaran

திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக தேனி நேரு சிலை மும்முனை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக திறந்த ஜீப்பில் வந்தார். அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி  மூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் அமைச்சர்கள் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது, “முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை பலப்படுத்தி ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படும். திண்டுக்கல் - சபரிமலை ரயில் திட்டம் கொண்டு வரப்படும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த தேனி, உசிலம்பட்டி, போடி ஆகிய  பகுதியில் புறவழிச்சாலைகள் புதிதாக அமைக்கப்படும்.

டிடிவி தினகரன் வனவாசம் சென்று வந்தது போல உள்ளது. மீண்டும் தேனி வந்தது என்று கூறுகிறாரே என்ற கேள்விக்கு ? அவர் அப்படியே சென்று இருக்கலாம் .தேர்தல் என்பது மக்களோடு மக்களாக களத்தில் இருந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்திருக்க வேண்டும். 14 வருடம் வன வாசம் சென்று மீண்டும் வந்திருப்பதாக கூறும் டிடிவி தினகரன், அப்படியே சென்றிருக்க வேண்டியது தானே, ஏன் மீண்டும் வந்தார்? பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன், ஒரு சீட்டை காலில் விழுந்து பெற்று இருக்கிறார்.

செல்வாக்கை நிரூபிக்க ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தனித்து சுயேட்சையாக போட்டியிட வேண்டும். இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார் என்று டிடிவி.தினகரன் கேட்கிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியா கூட்டணி வெற்றி பெறும் அதன் பின்னர் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். இதைப்பற்றி தினகரன் கவலைப்பட வேண்டாம்” என்று கூறினார்.

Next Story

“இ.பி.எஸ்.உடன் எந்த காலத்திலும் அமமுக இணைந்து செயல்படாது” - டிடிவி தினகரன் 

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
Ammk will never work with EPS says TTV Dhinakaran

திண்டுக்கல்லில்  மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம்  நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் டி.வி.வி. பேசுகையில், “நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் உறுதி யாக கூட்டணி அமைத்து  தேர்த லை நாங்கள் சந்திப்போம். கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகள் முடிந்த பிறகு செய்தியாளர்கள் மத்தியில் அறிவிக்கப்படும். துரோக சக்தியான எடப்பாடி பழனிச்சாமி உடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்த காலத்திலும் பயணிக்காது. எடப்பாடி பழனிச்சாமி என்ற துரோகியுடன் எந்த காலத்திலும் நாங்கள் இணைந்து செயல்பட மாட்டோம். நாடாளுமன்றத் தேர்தலிலும் அவருடன் இணைந்து போட்டியிடமாட்டோம். 

அம்மாவின் உண்மை விசுவாசிகளான அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து தேர்தலை நாங்கள் சந்திக்க உள்ளோம். எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. நான்கரை ஆண்டு காலம் அதிமுக ஆட்சியை காப்பாற்றி கொடுத்தது யார் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியவருக்கு துரோகம், இந்த ஆட்சியை பாதுகாத்து கொடுத்தவர்களுக்கும் துரோகம், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம், எடப்பாடி பழனிசாமி துரோகம் என்ற கத்தியை கையில் எடுத்து உள்ளார். அந்த கத்தியாலேயே அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிச்சாமி வீழ்வார். எடப்பாடி பழனிச்சாமி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்கிறார். துரோகம் என்றைக்குமே ஜெயிக்கப் போவதில்லை. அது வீழப்போகும் நேரம் வந்து விட்டது. பாராளுமன்ற தேர்தலில் பல கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அது உறுதியான பிறகு தகவல் தெரிவிக்கப்படும்.

திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் விவசாயிகள் இளைஞர்கள் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போக்கு வரத்து தொழிலாளர்கள் அனைத்து சமுதாய மக்களும் அனைத்து தரப்பினரும் ஏண்டா இந்த ஆட்சியை கொண்டு வந்தோம் என மிகவும் வருத்தத்துடன் உள்ளனர். இந்தக் கோபம் இந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தப் போகிறது. இந்தியா கூட்டணி எங்கு இருக்கிறது என்பது தெரியாமல் போய்விட்டது” என்றார்.

பழைய அதிமுக மீண்டும் உருவாக வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு :- பதில் அளித்த டிடிவி தினகரன், அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் ஒன்றாக உள்ளோம். அதனை ஏற்க எடப்பாடி பழனிச்சாமி மறுத்து வருகிறார். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு. ஆனால் பழனிச்சாமி போன்ற சுயநலவாதிகள் அதனை தடுக்கின்றனர் என்று கூறினார்.