Skip to main content

நான்காவது முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் ரங்கசாமி! 

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

Rangasamy takes over as Chief Minister for the fourth time!

 

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்கள், பா.ஜ.க 6 இடங்கள் எனத் தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அதையடுத்து இந்த கூட்டணியின் தலைவராக இருந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமியை, வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் ஒருமனதாக சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அதனைத் தொடர்ந்து ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை கடந்த மே 3-ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் ரங்கசாமி வழங்கினார். 

 

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15-வது சட்டப்பேரவைக்கான முதலமைச்சர் பதவியை ரங்கசாமி ஏற்றார். துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ரங்கசாமிக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

 

புதுச்சேரியில் 2001, 2006 காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு முறை முதலமைச்சராகப் பதவி வகித்தவர் ரங்கசாமி. கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து பிரிந்து 2011ஆம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி, இரண்டே மாதத்தில் முதலமைச்சரானார். தொடர்ந்து தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் மீண்டும் நான்காவது முறையாக முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Rangasamy takes over as Chief Minister for the fourth time!

 

ரங்கசாமி, ஆகஸ்டு 4, 1950 ஆம் ஆண்டு நடேசன் - பாஞ்சாலி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் புதுச்சேரியில் உள்ள தாகூர் கலைக்கல்லூரியில் இளங்கலைப் படிப்பு மற்றும் புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பும் படித்தார். மிகவும் எளிமையான முதலமைச்சர் என்று பெயர் பெற்ற இவர், முதலமைச்சரான பின்பும் இருசக்கர வாகனத்தில் சட்டசபைக்கும், தொகுதிகளுக்கும் வந்தவர். பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டம், காமராஜர் கல் வீடு கட்டும் திட்டம், சென்டாக் தேர்வு மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி வரை இலவசக் கல்வித் திட்டம், படுகை அணைகளை அமைத்து புதுச்சேரியின் நீர்வளத்தை மேம்படுத்தியது ஆகியவை இவரது ஆட்சிக் காலத்தின் குறிப்பிடத்தகுந்த சாதனைகளாகும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி; ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் போக்கு?

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Puducherry; Conflict between the Governor and the Chief Minister?

புதுச்சேரி மாநிலம் காமராஜர் மணிமண்டபத்தில் பொதுப்பணித்துறைக்கு, டெல்லியில் உள்ள நிறுவனத்துடன் கழிவுநீர் பராமரிப்பு உபகரணம் கொள்முதல் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமை வகித்தார்.புதுவை முதல்வர் ரங்கசாமி முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசிதாவது, “பல ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தப்படுத்தவும், பாதாள சாக்கடைகள் உள்ளிட்டவைகளை வெளிநாட்டில் சுத்தம் செய்வது போல் நவீன எந்திரங்கள் மூலமாக சுத்தம் செய்ய எந்திரங்களை வாங்க வேண்டும் என்று கூறி வருகிறேன். தற்போது, எதிர்பார்த்த இந்த திட்டம் செயல் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக வெற்றி பெற ஊழியர்கள் கையில் தான் இருக்கிறது. பிறர் மீது பழி போட்டு காலம் தள்ளக் கூடாது.

அரசு செயலர்கள் தங்களிடம் வரும் கோப்புகளை துறை தலைவர்கள், இயக்குநர்களிடம் விவரங்களை கேட்டறிந்து உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், பொதுப்பணித்துறை செயலரின் பணி திருப்திகரமாக இல்லை. அரசு செயலரின் நடவடிக்கையால் பொதுப்பணித்துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் அச்சமுடன் பணியற்றும் சூழல் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். புதுச்சேரி அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தினால் புதுவையில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வரமுடியாத சூழல்நிலை ஏற்பட்டிருக்கிறது. புதுவையின் வளர்ச்சிக்கு தலைமை செயலர், அரசு செயலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். 

இதனை தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “முதல்வர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். உச்சநீதிமன்றம் ஆளுநர், முதல்வர் ஆகியோர் பிரச்சனைகளை அமர்ந்து பேசி தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. புதுவை தலைமை செயலாளர் திட்ட காலதாமதத்துக்கான காரணம் குறித்து அமர்ந்து பேச வேண்டும். இதற்கான விளக்கத்தை பெற வேண்டும். துறை தோறும் அதிகாரிகள் பேசி காலதாமதத்தை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே தலைமை செயலரிடம் தெரிவித்துள்ளேன்.இதை சுமுகமாக பேசி தீர்க்க வேண்டும்” என்று கூறினார். 

Next Story

“மத்தியிலும், மாநிலத்திலும் பெண்கள் விரோத ஆட்சி நடக்கிறது” - புதுவை முன்னாள் முதல்வர்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Former Chief Minister Narayanasamy says There is an anti-women regime at the state

 

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில், புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் ரங்கசாமி உட்பட நான்கு அமைச்சர்கள் பதவி வகித்து வருகின்றனர். காரைக்கால் நெடுங்காடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்துத் துறை, ஆதி திராவிடர் நலம், வீட்டு வசதி உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டு அமைச்சராகச் செயல்பட்டு வந்தார். 

 

இந்நிலையில், திடீரென அவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். மேலும், அந்தக் கடிதத்தில் அவர், “தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள். தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது” எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் அளித்த அவரது ராஜினாமா கடித விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “4 நாட்களுக்கு முன்பு முதல்வர் ரங்கசாமி துணை நிலை ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர், சந்திர பிரியங்காவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், திருமுருகனை அமைச்சராக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சென்று பின்பு ஒப்புதல் பெற்று புதுச்சேரிக்கு வந்துள்ளது. இதை அறிந்த சந்திர பிரியங்கா தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு கொடுத்துள்ளார். 

 

ஒரு பெண் அமைச்சரை அசிங்கப்படுத்தியிருக்கின்றனர். ஒரு அமைச்சர் எவ்வளவு வேதனைப்பட்டிருந்தால் மன வேதனையோடு அந்த கடிதத்தை எழுதி இப்படி ஒரு அறிக்கையை கொடுத்திருப்பார். ஆணாதிக்கத்தை கொண்டு தனிப்பட்ட பிரச்சனைகளை முன் வைத்து பழிவாங்குகின்றனர். தனது கட்சியில் பாலியல் ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் தொல்லை கொடுத்துள்ளதாக அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இது என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சியின் சுயரூபத்தை காட்டுகிறது. 

 

அதனால், ரங்கசாமி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி ஏன் வாய்மூடி அமைதியாக இருக்கிறார்?. பெண்ணுரிமை குறித்து வாய் கிழிய பேசும் துணை நிலை ஆளுநர் தமிழசை செளந்தரராஜன் இந்த விவகாரத்தில் பெட்டி பாம்பாக அடங்கி கிடப்பது ஏன்?. மத்தியிலும், மாநிலத்திலும் பெண்கள் விரோத ஆட்சி நடக்கிறது. புதுச்சேரியை பொறுத்தவரை ரங்கசாமியும், பா.ஜ.கவும் பட்டியல் சமூகத்தினரை புறக்கணித்து வருகிறது” என்று கூறினார்.