Skip to main content

“நாம் தொடர்ந்து தட்ட வேண்டியது ஆளுநர் மாளிகையின் கதவு..” முதல்வரை வலியுறுத்தும் ராமதாஸ்..! 

Published on 11/06/2021 | Edited on 11/06/2021

 

Ramadoss statement to release perarivalan and others

 

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் பல வருடங்களாக சிறைத் தண்டனையை அனுபவித்துவருகின்றனர். இந்நிலையில், அவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில் அவர், “இராஜிவ்காந்தி கொலை வழக்கில் விசாரணை என்ற பெயரில் பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்று விசாரணை அதிகாரிகள் முதல் நீதிபதிகள்வரை அறிவித்தும் அவரை விடுதலை செய்யும் விஷயத்தில் ஆளுநர் மாளிகை தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடுவது கண்டிக்கத்தக்கது.

 

இராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளனிடம் சிறிய விசாரணை நடத்த வேண்டியிருப்பதாக 30 ஆண்டுகளுக்கு முன் 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதி இரவு சி.பி.ஐயின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு பேரறிவாளனின் பெற்றோரிடம் கூறியது. விசாரணை முடிவடைந்ததும் அடுத்த நாள் காலையில் பேரறிவாளனை அனுப்பிவைப்பதாக விசாரணை அதிகாரிகள் உறுதியளித்தனர். அதை ஏற்று பேரறிவாளனை அவரது பெற்றோர் எந்த அச்சமும் இன்றி அனுப்பிவைத்தனர். ஆனால், இராஜிவ் கொலை குறித்த சில விளக்கங்களை பெறுவதற்கான விசாரணை என்று அழைத்துச் சென்ற அதிகாரிகள், அங்கு பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திரித்து எழுதி கொலை வழக்கில் சேர்த்தனர். அதைத் தொடர்ந்து அந்த வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளனும், மேலும் 6 தமிழர்களும் இன்றுவரை 30 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.

 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது; பின்னர் அது ரத்து செய்யப்பட்டு பல்வேறு காலகட்டங்களில் வாழ்நாள் சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டது. பேரறிவாளன் எந்தக் குற்றமும் செய்யாதவர் என்று அவரை விசாரித்த காவல் அதிகாரியும், தண்டனை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதியும் கூறியதெல்லாம் அனைவரும் அறிந்த வரலாறு. பேரறிவாளன் உள்ளிட்ட தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த நிலையில், அதை மதித்து 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பரிந்துரை தீர்மானத்தை, 09.09.2018ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை, நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது. ஆனால், அதன்மீது 871 நாட்களாக எந்த முடிவும் எடுக்காமல் அமைதி காத்துவிட்டு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கோப்புகளை தங்களுக்கு ஆளுநர் அனுப்பிவிட்டதாக 25.12.2020 அன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை தெரிவித்ததில்தான் இவ்வழக்கு முடங்கிவிட்டது. அதை தகர்த்து எழுவரை விடுவிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

 

தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த மாதம் பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் அவர்கள், 7 தமிழர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த மே 20ஆம் நாள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். 7 தமிழர் விடுதலை விவகாரத்தை குடியரசுத் தலைவரின் முடிவுக்கு கொண்டு செல்வது, அவர்களின் விடுதலையை தாமதப்படுத்தும் செயல் என்பது மட்டுமின்றி,  மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசிடம் தாரைவார்ப்பதற்கு ஒப்பான செயலாகும். 7 தமிழர்களை விடுதலை செய்யும் அதிகாரம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின்படி தமிழ்நாட்டு ஆளுநருக்கு உண்டு என்று பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் 07.09.2018 அன்று உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக தீர்ப்பளித்துவிட்ட நிலையில், நாம் தொடர்ந்து தட்ட வேண்டியது சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையின் கதவுகளைத்தானே தவிர, தில்லி குடியரசு மாளிகையின் கதவுகளை அல்ல.

 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை  ஆளுநர் தங்களுக்கு அனுப்பிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறினாலும் கூட, ஆளுநர் தரப்பிலிருந்து இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை அளித்த பரிந்துரையை ஆய்வுசெய்து ஒப்புதல் அளிக்க வேண்டியது அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின்படி ஆளுநரின் கடமை ஆகும். அதை அவர் தட்டிக்கழிக்க முடியாது. இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்ப முடியாது.

 

எனவே, 7 தமிழர்கள் விடுதலை குறித்து கடந்த 09.09.2018 அன்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை அளித்த பரிந்துரை மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநருக்கு இப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுத வேண்டும். நேரிலும் சந்தித்து வலியுறுத்த வேண்டும். பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிடுவதற்கு மனித உரிமைகளில் அக்கறை கொண்ட திறமையான மூத்த வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். அதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சிறை சென்ற மகன் பேரறிவாளன் விடுதலையாகி வீடு திரும்புவதைக் கண்டு அவரது வயது முதிர்ந்த தாயும், தந்தையும் மகிழ்ச்சியடைவதை உறுதி செய்ய வேண்டும். மிக விரைவில் இருள் விலகி ஒளி பிறக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.