Skip to main content

‘மூன்று கேமராக்களுக்கு முன்னால்..’ -கே.டி.ராஜேந்திரபாலாஜி அதிரடி ட்வீட்!  

Published on 23/07/2020 | Edited on 23/07/2020

 

rajendra balaji

 

“எடப்பாடியார் ஆட்சியை எப்படி விமர்சிக்கலாம்? அந்தத் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு இல்லை..” என்று வழக்கம்போல், அதிரடியாக  ‘ட்வீட்’ செய்துள்ளார், தமிழக பால்வளத்துறை அமைச்சர், கே.டி.ராஜேந்திரபாலாஜி.

 

அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் -   

 

‘பத்திரிகை ஊழியர்களைப் பட்டப்பகலில் படுகொலை செய்தவர்கள், பால்மலரை எரித்துக் கொன்று, மூட்டை கட்டி முட்புதரில் எறிந்தவர்கள்,  புத்தரைப் போல் நடிக்கலாமா? 

 

நில அபகரிப்புகளால் மக்களின் நிம்மதியைக் குலைத்தவர்கள், சைக்கோ கொலைகள், சரம்சரமாய் படுகொலைகள் எனச் சட்டம் ஒழுங்கைச் சீரழித்தவர்கள், உத்தமர் வேஷம் போடலாமா? 

 

ஓசி தேங்காய் முதல் ஓசி பிரியாணி வரை ஒன்றையும் விடாதவர்கள், நட்புக்கும் நஞ்சூட்டி முடித்தவர்கள், நடை பயிற்சியையும் கொலை பயிற்சி ஆக்கியவர்களுக்கு குற்றம் குறை கூற தகுதி உண்டா?

 

சீவிச் சிங்காரித்து சிகை அலங்காரம் செய்துகொண்டு, மூன்று கேமராக்களுக்கு முன்னால், வடநாட்டு வாத்தியார் எழுதித்தரும் அறிக்கைகளை வாசித்து, கரோனா காலத்திலும் இடைவிடாது படப்பிடிப்பு அரசியல் நடத்தும் மு.க.ஸ்டாலின், சட்டம், ஒழுங்கு குறித்தெல்லாம் சவடாலாகப் பேசலாமா? 

 

பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், அதற்கான தோட்டாக்களைத் தயாரிப்பதற்குத் தொழிற்சாலை வைத்தும், சண்டியர்த்தனம் செய்கின்ற ஒருவரை, சட்ட மன்ற உறுப்பினராய்க் கொண்டிருக்கும் சண்டாளர்கள், இப்படி வன்முறைக்கே வடிவான தி.மு.க., சாதி மதப் பூசலின்றி, சட்டம்-ஒழுங்கைப் பேணிக்காத்து, தவறிழைப்பவர் யாராயினும் தயவு காட்டாது, நீதியின் மாண்பை நிலைநாட்டும், எளிமை சாமானியர் எடப்பாடியார் அரசு குறித்து விமர்சனம் செய்யலாமா? 

 

சட்டம் ஒழுங்கை சீரழித்ததனாலும், மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட கறுப்பர் கூட்டத்தின் கையாளாக இருப்பதனாலும், தி.மு.க.வுக்கும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடியார் அரசை விமர்சனம் செய்வதற்கு எள்ளளவும் அருகதை இல்லை. அது இப்போதும் இல்லை; எப்போதும் இல்லை.’


 
இவ்வாறு ட்விட்டர் அறிக்கையில் நெருப்பைக் கொட்டியிருக்கிறார், கே.டி.ராஜேந்திரபாலாஜி!  

 

 

 

சார்ந்த செய்திகள்