Skip to main content

துரோகத்துக்கு முடிவு விரைவில் அமையும்... காலம் வலியது! - பொங்கலூர் மணிகண்டன்

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

pongalur manikandan comment about sasikala release and edappadi palanisamy
                                                    கோப்புப் படம் 

 

சிறை தண்டனை முடிந்து பெங்களூருவில் ஓய்வு எடுத்த சசிகலா, இன்று தமிழகம் திரும்புகிறார். தமிழகம் திரும்பும் அவருக்கு, அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டமாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அதேநேரம், அவர் சென்னை வரும் வழியில் அவரது ஆதரவாளர்கள் வைத்திருந்த பேனர்கள், கட் அவுட்டுகளை போலீஸார் அப்புறப்படுத்தியுள்ளனர். 

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் பொங்கலூர் மணிகண்டன், “சசிகலா ஆட்சி - கட்சியை மிகுந்த நம்பிக்கையோடு எடப்பாடியிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். சிறையிலிருக்கும் போதே அவரது கணவர் மறைந்தார். 

 

துக்கம் விசாரிக்கக் கூட எவரும் போகாமல் பண்பாடற்ற முதல் துரோகத்தைச் செய்தார்கள். நல்லதுக்குச் செல்லாவிட்டாலும் கெட்டதுக்குக் கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்பதை மறந்து சாவுக்குக்கூடச் செல்லாமல் செய்நன்றிக்கே சாவு மணி அடித்தார்கள். 

 

கட்சியின் பெயர், கொடி, சின்னம், ஆட்சி, கட்சி என அனைத்தையும் நம்பி ஒப்படைத்துச் சென்று நான்காண்டுகள் கழித்து சிறை மீண்ட ஒரு பெண்மணி வரும் நேரத்தில் ஆட்சி அதிகாரம் கட்சி ஆதிக்கம் அனைத்தையும் காட்டி கட்டுப்பாடுகளையும் காவல்துறை மூலம் கட்டளைகளையும் நிறைவேற்றிக் கட்டுக்கடங்காத துரோகத்தைச் செய்து வரலாற்றில் கரும்புள்ளியை கருமையத்தில் கச்சிதமாக்கிய எடப்பாடி பழனிசாமியை எள்ளளவும் மன்னிக்கவே முடியாது என்பது என் திடமான கருத்து.

 

அவர் எண்ணிப் பார்க்க முடியாத இடத்திற்கு, எட்டிப் பார்க்க முடியாத உயரத்திற்குக் கண்ணிமைக்கும் நேரத்தில் மகுடம் சூட்டி மாலை அணிவித்து மாபெரும் மரியாதை கிடைக்கக் காரணமானவர் சசிகலா என்பதை எவராவது மறக்க முடியுமா?

 

ஆயிரம் என்ன பல்லாயிரம் குறைகளைக் கூட சசிகலா மீது  சரமாரியாகச் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால், மனசாட்சியுள்ள மனிதர்கள் பதில் சொல்லுங்கள். ஜெயலலிதா இறக்கும் வரை சசிகலா இல்லாமல் அதிமுகவில் பதவி, பணம், செல்வாக்கு பெற்றவர் எவரேனும் உண்டா?

 

ஜெயலலிதா என்ற ஆளுமைக்கு அடைக்கலமாகவும், படைக்களமாகவும் விளங்கிய சசிகலாவே  அதிமுகவுக்கு அடித்தளமான தொண்டர்களை அளவு கடந்த பதவியில் அமரச் செய்து ஆச்சரியமூட்டினார் என்பதை  அமைச்சர்களான அனைவரும் அறிவார்கள்.

 

திமுக தலைவராக இருந்த கலைஞரை தங்கள் எதிரி என்று முன்னிறுத்தி எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஆகியோர் அரசியல் செய்ததை மறந்து கலைஞரின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி சுற்றம் சூழ ஆறுதல் கூறி அரசியல் பண்பாட்டைப் பாதுகாத்து பாராட்டைப் பெற்றவர்கள் பழனிசாமி அமைச்சரவை சகாக்கள். 

 

ஆனால் சொந்த தாயின் மேலாக தங்களைப் பாதுகாத்து பதவியில் அமர்த்தி உயர்த்திய சசிகலாவின் கணவரின் மறைவுக்குக் கூட  செல்லாமல் கண்டிப்புடன் பரோலை பயன்படுத்தி, நம்பிக்கைத் துரோகத்தால் மத்திய அரசுக்கு மண்டியிட்டு மன்னிப்பில்லாத மாபாதகத்தைச் செய்து முடித்தார்கள்.

 

இன்னுமா தாகம் தீரவில்லை. துரோகத்தின்  எல்லை நீள்கிறது. சசிகலாவுக்கு முன் நேருக்கு நேர் நின்று பேசும் துணிவில்லாத தர்மத்துக்கு யுத்தம் செய்த  துச்சாதனக் கூட்டத்தின் துரோகத்துக்கு முடிவு விரைவில் அமையும். காலம் வலியது”  எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.