Skip to main content

''இலவு பழுக்கும் என்று தமிழக அரசு காத்திருந்தால் ஏமாற்றமே மிஞ்சும்''-ராமதாஸ் வருத்தம்

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

pmk

 

'தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியாது; மத்திய அரசுதான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி  பொறுப்பை தமிழக அரசு தட்டிக்கழிப்பது வருந்தத்தக்கது' என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் விவரங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். தொடக்கத்தில் அதற்கு பதிலளிக்காத முதலமைச்சர், ஒரு கட்டத்தில் தேசிய அளவில் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி மத்திய அரசை வலியுறுத்த தேவையில்லை; தமிழக அரசே நடத்தலாம் என்று முதலமைச்சருக்கு அறிவுறுத்தியிருந்தேன். 26.10.2023-ஆம் நாள் சென்னையில்  பா.ம.க. சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கத்திலும் இதே கருத்தை நானும், வல்லுநர்களும் வலியுறுத்தினோம்.

 

இவ்வளவு கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகும், இணைய இதழ் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த முதலமைச்சரிடம், ‘‘ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசே நடத்த வேண்டும் என சில தலைவர்கள் கூறி உள்ளனர்.  இது சாத்தியமா? தமிழ்நாடு அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பு உள்ளதா?’’ என்று கேட்ட போது, ‘‘ஒன்றிய அரசு எடுக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்புதான் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுமைக்கும் சமூகநீதி கிடைக்க வழிவகுக்கும். ஆகவேதான் ஒன்றிய அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளேன்’’ என விடை அளித்திருக்கிறார். இந்த விடையைப் பார்க்கும் போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்த மாநில அரசின் அதிகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை அல்லது உணர்ந்திருந்தும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார் என்றுதான் புரிந்து கொள்ள முடிகிறது.

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இரு விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலாவதாக, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது; அது சாதிவாரியாக மக்களை பிளவுபடுத்தும் முயற்சி என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களே கூறியிருக்கிறார். இத்தகைய சூழலில் எந்த நம்பிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறீர்கள்?

 

இரண்டாவதாக, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது; அத்தகைய கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க முடியாது? என்று பீகார் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தெள்ளத் தெளிவாக கூறிவிட்டன. இது போன்ற கணக்கெடுப்புகளை நடத்துவதற்காகவே புள்ளியியல் சட்டம் ஒன்றையும் 2008-ஆம் ஆண்டில் மத்திய அரசு இயற்றியுள்ளது. இவ்வளவுக்கு பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த என்ன தயக்கம்?

 

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான சிக்கலில் தமிழக அரசின் தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் பார்க்கும் போது, சமூகநீதிக்கு எதிரான சக்திகளால் முதலமைச்சர் தவறாக வழி நடத்தப்படுகிறாரோ? என்று ஐயப்படத் தோன்றுகிறது. அண்டை மாநிலங்களின் அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தாலே சாதிவாரி கணக்கெடுப்புக் குறித்த கள நிலவரங்களை புரிந்து கொள்ள முடியும். ஆந்திரத்தில் வரும் 15-ஆம் நாள் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கூறியிருக்கிறார். கர்நாடகத்தில் 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நவம்பர் மாதம் தாக்கல் செய்யும்போது, அதை தமது அரசு ஏற்று, செயல்படுத்தும் என்று முதலமைச்சர் சித்தராமையா கூறியிருக்கிறார். ஒடிசா மாநிலத்தில் ஏற்கனவே சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பால் தான் சமூக நீதி வழங்க முடியும் என்றால், தமிழகத்தைச் சுற்றியுள்ள இந்த மாநிலங்கள் எதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகின்றன? என்பதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளக்குவாரா?

 

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்கனவே மூன்று முறை கிடைத்தன. ஆனால், மூன்று முறையும் அந்த வாய்ப்புகளை தமிழக அரசு தவறவிட்டுவிட்டது. அந்த தவறுகளுக்கு தீர்வு காணும் வகையிலாவது இப்போது தமிழக அரசு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை நடத்தவேண்டும்.

 

சமூகநீதி வழங்குவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு தான் அடிப்படை என்பதில் முதலமைச்சருக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் மாறுபட்ட கருத்து அல்ல. அந்தக் கணக்கெடுப்பை யார் நடத்துவது என்பதில் தான் கருத்து முரண்பாடு. மத்திய அரசு ஒருபோதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப் போவதில்லை. இலவு பழுக்கும் என்று தமிழக அரசு காத்திருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். அதுவரை சமூகநீதி நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க முடியாது. எனவே, இந்த சிக்கலில் பிடிவாதம் காட்டாமல், கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விடாமல் தமிழ்நாட்டில் மாநில அரசின் மூலம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; சமூக நீதியை காக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.