Skip to main content

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய பத்மப்ரியா..!

Published on 13/05/2021 | Edited on 13/05/2021

 

Padmapriya Resign from MNM party


நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, நாதக, அமமுக, மநீம என ஐந்துமுனை போட்டி நிலவியது. அதில், திமுக தனிப்பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மேலும், அதிமுக எதிர்க்கட்சியாக அமரவிருக்கிறது. இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகினர். மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன், கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகினார். அப்போது அவர், “இங்கு ஜனநாயகம் இல்லை” என்று கூறி கட்சியைவிட்டு வெளியேறினார். 

 

இதற்கு மநீம தலைவர் கமல்ஹாசன், அதனைக் கண்டித்து 'துரோகி' என அறிக்கை வெளியிட்டிருந்தார். இது மக்கள் மத்தியிலும், கட்சி நிர்வாகிகள் இடையிலும் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது தனது தனிப்பட்ட காரணங்களால் மிகுந்த சிந்தனைக்குப் பிறகு கட்சியைவிட்டு விலகுவதாக அக்கட்சியின் மதுரவாயல் வேட்பாளர் பத்மப்ரியா தெரிவித்துள்ளார். இதனை அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

அதில் அவர், “அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு, என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். 

 

 

 

சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கிறேன். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

அறிவாலயம் வந்த கமல்ஹாசன்; உறுதியான திமுக-மநீம கூட்டணி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kamal Haasan who went dmk head office; A solid DMK-MNM alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை தீவிரமாக நடத்தி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைமை அலுவலமான அண்ணா அறிவாலயம் சென்றுள்ளார். அவரை அமைச்சர் உதயநிதி வரவேற்றார். நேற்று மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டிற்கான கையொப்பம் கையெழுத்தானது.

இன்று மாலை காங்கிரஸ் திமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சி மறைமுகமாக திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் அண்ணா அறிவாலயம் வந்துள்ளார். இதனால் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், 'இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. இது பதவிக்கான தேர்தல் கிடையாது. நாங்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். இது பதவிக்கான விஷயம் அல்ல; நாட்டுக்கான விஷயம். நான் எங்கு சேர வேண்டுமோ அங்கு சேர்ந்திருக்கிறேன். மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் (ராஜ்ய சபா) ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.

இதுவரை திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட்- 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் -2 தொகுதி, ஐ.யூ.எம்.எல்- 1 தொகுதி, கொ.ம.தே.க-1 தொகுதி, மதிமுக-1 தொகுதி, விசிக-2 தொகுதி, மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை தொகுதி  என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. காங்கிரஸ்-திமுக இடையே தற்போது வரை இறுதி பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.