Skip to main content

கருவுற்றப் பெண்ணை சாகடிப்பதா? ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்! அன்புமணி

Published on 08/03/2018 | Edited on 08/03/2018


 

திருச்சியில் காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா என்பவர் உயிரிழந்த சம்பவம் குறித்து பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

அதில் அவர் கூறியிருப்பதாவது, 
 

உலகமே மகளிர் நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், திருச்சி தூவாக்குடி சாலையில் நேற்றிரவு கருவுற்ற பெண்மணிக்கு காவல்துறையால் பெருங்கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது. தஞ்சை சூலமங்கலத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் கருவுற்ற தமது மனைவி உஷாவுடன் இரு சக்கர ஊர்தியில் வந்த போது, அவர் தலைக்கவசம் அணியவில்லை என்பதற்காக அவரது வாகனத்தைப் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் எட்டி உதைத்ததில் இருவரும் நெடுஞ்சாலையில்  விழுந்துள்ளனர். சாலையில் விழுந்த உஷா மீது மூடுந்து மோதியதில் அவர் அங்கேயே உயிரிழந்தார். கணவர் ராஜா படுகாயங்களுடன் திருச்சியிலுள்ள மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.
 

இந்த விஷயத்தில் காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் மனித நாகரிகத்துக்கு சற்றும் ஒவ்வாதது ஆகும். தூவாக்குடி பகுதியில் தலைக்கவச சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் காமராஜும், அவரது குழுவினரும் கை காட்டிய போது ராஜா மிதமான வேகத்தில் நிற்காமல் சென்றுள்ளார். இது காவல்துறை மீதான அச்சத்தால் பலராலும் செய்யப்படும் ஒன்று தான். ராஜா பயங்கரவாதியோ, கடத்தல் காரனோ இல்லை என்பதால் அவரை விட்டிருக்கலாம்; இல்லாவிட்டால் அவரை மறித்து நிறுத்தியிருக்கலாம். ஆனால், பொறுப்பற்ற முறையில், மிருகத்தனமாக செயல்பட்ட ஆய்வாளர் காமராஜ் துரத்திச் சென்று ராஜாவின் இரு சக்கர ஊர்தியை எட்டி உதைத்ததாலேயே அந்த வாகனம் நிலைதடுமாறி விழுந்துள்ளது. சாலையில் விழுந்த உஷா சுதாரிப்பதற்குள் அவர்களுக்கு பின்னால் வந்த மூடுந்து மோதி இறந்தார்.
 

ஒருவர் தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக அவரது வாகனத்தை எட்டி உதைக்கும் அதிகாரத்தை  காவலர்களுக்கு எந்த சட்டம் வழங்கியிருக்கிறது? அப்பாவி இணையரை எட்டி உதைத்து உயிரழக்கும் நிலைக்கு தள்ளுவது தான் காவல்பணியா? காவல்துறையினரின் இத்தகைய அணுகுமுறைக்கு இது தான் முதல் உயிரிழப்பு என்று கூறிவிடமுடியாது. சென்னை, சேலம் உள்ளிட்ட இடங்களில் இது போன்று பல நிகழ்வுகள் நடந்துள்ளன. தலைக்கவசம் அணியாதவர்களை விரட்டிச் சென்றதால் சாலைத் தடுப்பு மீது இருசக்கர ஊர்தி மோதியும், தவறி விழுந்தும் பல விபத்துகள் இதுபோன்று ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற செயல்களில் காவல்துறையினர் ஈடுபடக்கூடாது; சாலை நடுவில் நின்று வாகனங்களை மறிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால், அதையெல்லாம் மதிக்காமல் ஆய்வாளர் காமராஜ் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் கருவுற்ற பெண் உயிரிழந்துள்ளார்.
 

இந்த நிகழ்வைக் கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த பொதுமக்கள் பெருமளவில் திரண்டு 4 மணி நேரத்திற்கும் மேலாக சாலைமறியலில் ஈடுபட்டதால், நள்ளிரவில் அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைத்தனர். காவல்துறை தடியடியில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினரின் இந்த செயலும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும். மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல் அதிகாரி ஒருவரே மிருகத்தனமாக செயல்பட்டு அப்பாவி பெண்ணின் இறப்புக்கு காரணமாகி விட்டதால் தான் அதைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இச்சிக்கலை  பொறுப்புடன் கையாள்வதற்கு பதிலாக தடியடி நடத்தி மக்களைக் காயப்படுத்தியது ஏற்க முடியாததாகும்.
 

காவல்துறையில் மனிதநேயம் கொண்டவர்கள் பெருமளவில் இருக்கும் போதிலும், ஆய்வாளர் காமராஜ்  போன்ற மனநிலை கொண்டவர்களால் தான் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. காமராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். உயிரிழந்த உஷாவின்  குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பொதுமக்கள் மீது தடியடி நடத்த ஆணையிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் மகத்துவம் குறித்து காவலர்களுக்கு போதிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.