Skip to main content

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா பண்ணிட்டு.. ஜெயித்துக் காட்டணும்.. நயினார் நாகேந்திரனுக்கு சவால் விடும் அதிமுக அமைப்புச் செயலாளர் 

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

 ADMK secretary who challenge Nainar Nagendran to resign MLA

 

அ.தி.மு.க.வினருக்கு ஆண்மை இல்லை என்று பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசியது இலைக்கட்சித் தொண்டர்களின் கண்களைச் சிவக்க வைத்திருக்கிறது. கொந்தளிப்பின் உச்சியிலிருக்கிறார்கள்.

 

அவருக்குப் பதிலடியாய் நெல்லை தொகுதியின் அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரான சுதா. பரமசிவன் நெத்தியடியாய் வார்த்தைகளை சக  தொண்டர்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரான சுதா பரமசிவன் ‘தமிழகத்தில் குறிப்பாக தென்காசி, கன்னியாகுமரி, கோவை பகுதிகளில் மட்டுமே பி.ஜே.பி.க்கு தொண்டர்கள் உள்ளனர். அதைவிடுத்து பிற இடங்கள் மற்றும் குறிப்பாக நெல்லை சட்ட மன்றத்தில் விரல் நீட்டுமளவுக்குத் தாமரைத் தொண்டர்களில்லை. நயினார் நாகேந்திரன் நெல்லை சட்டமன்ற உறுப்பினராக ஜெயிப்பதற்குக் காரணமே ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டர்களும் தாமரைக் கொடியை உயர்த்தி உழைத்ததால் தான் எம்.எல்.ஏ.வானார். பிறர் தோளின் மூலம் வெற்றி கண்டவர் எங்களைப் பார்த்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்மை இல்லை. அவர்கள் சட்டமன்றத்தில் வாய்திறக்கவில்லை.

 

அவர்கள் தி.மு.க.விற்கு ஆதரவாகப் பேசிவருவது அவர்களின் சுயநலம். சிறைச்சாலைக்குச் செல்லாமலிருப்பதற்காகவே இப்படி பேசி வருகிறார்கள் என்று எங்களைப் பார்த்து தரக்குறைவாகப் பேசிவருகிறார். 2001ல் அ.தி.மு.க.வில் அம்மாவின் தயவால் அமைச்சராகி தொழில்துறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். எங்களைப் பார்த்து விரல் நீட்டும் உங்களைப் பார்த்து ஒரே கேள்வி கேட்கிறோம். நெல்லை சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு ஜெயித்து உங்களின் ஆண்மையை நிரூபித்துக் காட்டுங்கள். முடியுமா? சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. அ.தி.மு.க. கூட்டு வைத்ததால் தான் இவ்வளவு படுதோல்வியை அடைந்துள்ளோம். அதற்கு காரணமே பி.ஜே.பி. கட்சிதான்.’ என்று சொன்ன சுதா பரமசிவனின் படபடப்பு அடங்க நேரமானது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.