Skip to main content

பாசத் தொண்டர்கள்; பலத்த வரவேற்பு! - ஆனந்தக் கண்ணீரில் அமைச்சர்!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

Minister Kamaraj tears back from Corona

 

கரோனா சிகிச்சை முடிந்து, பூரண குணமடைந்து வீடு திரும்பும் உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு திருவாரூர் மாவட்ட அதிமுகவினர் மன்னார்குடியில் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட காமராஜ் அடுத்தக்கட்ட வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

 

கடந்த  இரண்டு மாதங்களுக்கு முன்பு காமராஜ், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரது உடல் நலன், மிகமோசமான நிலையில் இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய அமைச்சர்களும்கூட அவசர அவசரமாகச் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

 

Minister Kamaraj tears back from Corona

 

இதற்கிடையில் காமராஜின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல கோயில்களில் யாகம், பூஜை ஆகியவற்றை நடத்தினர். நன்னிலம் வடக்கு ஒன்றியச் செயலாளர் சி.பி.ஜி.அன்பழகன், ஒருபடி மேலே சென்று, காமராஜின் ஃபேவரட் கடவுளான சிறுபுலியூர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்குச் சென்று, அமைச்சர் காமராஜ் மீண்டு வரவேண்டுமென ஆயிரக் கணக்கான பெண்களோடு பால்குடம் எடுத்து வேண்டினார். இந்த நிகழ்வில் நன்னிலம் தாசில்தாராக இருந்து லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்கிய லட்சுமி பிரபாவும்கூட கலந்துகொண்டார் எனப் பெரிதாகப் பேசப்பட்டது. 

 

இந்த நிலையில், பூரண குணமடைந்து சென்னையில் ஓய்வெடுத்த காமராஜ், மீண்டும் நன்னிலம் தொகுதியில் போட்டியிட சீட் ஒதுக்கப்பட்டதை அடுத்து சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு வரவேற்பு அளிக்க மன்னார்குடி அருகே மேலவாசல் பகுதில் அதிமுகவினர் திரண்டனர். அங்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்ப அணியினர் என 300க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக காமராஜுக்கு வரவேற்பு அளித்து அழைத்துவந்தனர்.

 

Minister Kamaraj tears back from Corona

 

அந்த வரவேற்பு நிகழ்வில் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சிவா.ராஜமாணிக்கம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராமன், நகர கூட்டுறவு வங்கித் தலைவரும், காமராஜின் அக்கா மகனுமான ஆர்.ஜி. குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் பாசத்துடன் தனக்கு உற்சாக வரவேற்பு அளித்ததைக் கண்ட காமராஜ், கண் கலங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்