Skip to main content

அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பியவர் மரணம்... ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க எம்.எச்.ஜவாஹிருல்லா கோரிக்கை!

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

M. H. Jawahirullah


அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பிய முஹம்மது சரீப் பரிதாபமாக மரணமடைந்தார் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகப் பெரும் மன உளைச்சல்களுக்குப் பிறகு கடந்த வெள்ளியன்று சென்னை வழியாக மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பிய திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரைச் சேர்ந்த முஹம்மது சரீப் என்ற 61 வயது சகோதரர் மாம்பாக்கத்தில் விஜடி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தனிமைப்படுத்துதல் முகாமில் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மருத்துவ உதவி கேட்டும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் காட்டிய அலட்சியப் போக்கினால் ரத்த வாந்தி எடுத்து சரீப் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலென்சு அனுப்புங்கள் என்று அங்குத் தனிமைப்படுத்தியிருந்தவர்கள் கோரிக்கை வைத்து அரசு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. இதே போல் இரண்டு தினங்களாக மருத்துவ உதவி கேட்பவர்களின் கோரிக்கைகளை அரசு நிர்வாகம் அலட்சியப்படுத்தி வந்துள்ளது.

 

 


தொடர்ச்சியாகத் தனிமைப்படுத்துதல் முகாமில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் வி.ஐ.டி. முகாமில் எவ்வித பாகுபாடும் இல்லாமல் தாயகம் திரும்பிய தமிழர்கள் அனைவர்களுக்கும் பணிவிடை செய்து வந்தனர். ஆனால் கடந்த மூன்று தினங்களாகத் தன்னார்வ அமைப்புகளின் சேவைகளுக்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார். இதன் காரணமாகக் கடந்த மூன்று தினங்களாக வி.ஐ.டி. தனிமைப்படுத்துதல் முகாமில் உள்ளவர்கள் மிகப் பெரும் பாதிப்பிற்கு இலக்காகியுள்ளனர். எமது அமைப்பின் சேவை தொடர அனுமதிக்கப்பட்டிருந்தால் நோயுற்றவர்களைத் துரிதமாக எமது ஆம்புலென்சு மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்க முடியும்.

தானும் உதவாமல், உதவி செய்து வந்தவர்களையும் உதவிட விடாமல் அலட்சிய போக்குடன் நடந்து கொண்ட மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரத்த வாந்தி எடுத்து ஒரு உயிர் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த உயிர் இழப்பிற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றேன். இறந்த முஹம்மது சரீபின் குடும்பத்தினருக்கு ரூ10 லட்சம் இழப்பீடு தமிழக அரசு அளிக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோருகின்றேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மோடியின் வெறுப்பு பிரச்சாரம்; ஆக்சன் எடுக்குமா தேர்தல் ஆணையம்?- ஜவாஹிருல்லா

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Jawahirullah said Election Commission should take action against Modi hate campaign

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் அனல் கக்கும் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் வெறுப்பு அரசியலை உமிழ்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம். எல்.ஏ, "ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  தனது பொறுப்பு மிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் சீர்குலைக்கும் வகையில் நஞ்சைக் கக்கி இருக்கிறார். அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா... மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச்செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூடவிட்டுவைக்காது என்றெல்லாம் கேடுகெட்ட ஒரு மூன்றாம் தரப் பேச்சாளரைப் போல ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது இந்திய நாட்டையே உலக அரங்கில் வெட்கித்  தலைகுனிய வைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற தரங்கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை. தனது பத்தாண்டுக் கால ஆட்சியில் மக்களைக் கவரத்தக்கச் சாதனைகளைப் பேச மோடிக்கு ஏதுமில்லை.  

நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்ற நிலையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மட்ட ரகமான வெறுப்புப் பரப்புரையாளராக மாறியுள்ளார். குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது அவரது உள்ளத்தில் உறைந்திருந்த  சிறுபான்மை மக்களுக்கு எதிரான அதிதீவிர குரோத வெறுப்புணர்வும் கலவர வெறியும் பிரதமரான பிறகும் சற்றும் கரையவில்லை என்பதை அவரது பரப்புரை வெளிப்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் மத வெறுப்பு பரப்புரை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரதமராக இவர் தேர்தல் நடத்தை விதிமுறையையும் பின்பற்றவில்லை.

நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் சாராம்சத்தையும் மதிக்கவில்லை. ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக நாங்கள் இல்லை என்று ஊடகத்தில் விளம்பரம் செய்துவிட்டு, அப்பட்டமாக மதவெறுப்பு பரப்புரையை ஒரு பிரதமரே செய்திருப்பது அக்கட்சியின் அருவருப்பான சந்தர்ப்பவாதத்தை மக்களுக்கு உணர்த்தி உள்ளது. பிரதமர் பதவிக்கான கண்ணியத்தைச் சீர்குலைத்துள்ள பிரதமர் மோடிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து தனது நடுவுநிலையை நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இதை இந்தியத்தேர்தல் ஆணையம் மௌனமாகக் கடந்து போனால், அதன் நம்பகத்தன்மை உலக அரங்கில் கேள்விக்குறியாகிவிடும் என்பதையும் கருத்திற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்திடவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார் ஜவாஹிருல்லா.

Next Story

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் (படங்கள்)

Published on 07/02/2024 | Edited on 07/02/2024

 

 

2024 ஆம் ஆண்டுக்கான மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் இன்று (07-02-24) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.