
கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. கர்நாடகத் தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சியினருக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
கர்நாடகாவில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையும் கவனத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்புரில் காங்கிரஸ் சார்பில் நேற்று (12.06.2023) பொதுக்கூட்டமும் பேரணியும் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜபல்பூர் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "மத்தியப் பிரதேசத்தில் பாஜக 220 மாதங்களாக ஆட்சி செய்து வருகிறது. பாஜக ஆட்சியில் இதுவரை வியாபம் ஊழல், ரேஷன் விநியோக ஊழல் உள்ளிட்ட 225 ஊழல்கள் நடைபெற்றுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் 21 பேருக்கு மட்டுமே அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி தகவல் எனக்கு கிடைத்த பின் இதனை 3 முறை சரிபார்த்த போது உண்மை எனத் தெரியவந்தது. சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியின் மோசமான நிர்வாகத்தால் கடவுள்களும் தப்பவில்லை.
கடந்த மே மாதம் 28 ஆம் தேதி வீசிய சூறாவளிக் காற்றால் உஜ்ஜயினி மகாகாலேஸ்வரர் கோவிலில் 6 சிலைகள் சேதமடைந்துள்ளன" எனக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். பிரியங்கா காந்தி கூட்டத்தில் பேசும்போது சிலர் பதவி ஆசைக்காக வேறு கட்சிக்கு தாவிச் சென்றுவிட்டனர் என ஜோதிராதித்ய சிந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசினார். மேலும் மத்தியப்பிரதேச மக்களுக்கு 6 வாக்குறுதிகளை அளித்தார்.