Skip to main content

ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு குஷ்பு ஆதரவு!

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

Khushbu supports Governor RN Ravi's opinion!

 

‘ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு பற்றி விமர்சித்தது சரி’ என்று ஆளுநர் ரவியின் கருத்துக்கு ஆதரவாகப் பேசியுள்ளார் குஷ்பு. தமிழக அரசின் செயல்பாடு வெட்கக்கேடானது எனவும் விமர்சித்துள்ளார். மேலும், பா.ஜ.க.வில் தான் மிகப் பாதுகாப்பாக இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். 

 

கோவை இடையர்பாளையம் பகுதியில் பா.ஜ.க. சார்பில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற நடிகை குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, “தமிழக அரசு பொங்கல் பரிசாக வெறும் ஆயிரம் ரூபாய், ஒரு கரும்பு கொடுப்பது மிகவும் வெட்கக்கேடானது. பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என ஒருவர் சொல்கிறார் என்பதற்காக பாஜகவில் இருந்து யாரும் வெளியில் போகவில்லையே! நானும் பாஜகவில் தான் இருக்கிறேன். ஒரு சிலர் போவதால் பாதுகாப்பு இல்லை என்று கூறமுடியாது. பாஜகவில் இருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது.

 

ஜனநாயக ரீதியாக எல்லோருக்கும் பேசுவதற்கும் சுதந்திரம் இருக்கிறது. தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மிகவும் துணிச்சலான தலைவர். துணிச்சலாக, அதிரடியாகப் பல முடிவுகளை எடுத்து வருகிறார். நான் மும்பையில் பிறந்தாலும் 36 ஆண்டுகள் தமிழகத்தில் தான் இருக்கிறேன். நான் உண்மையான ரத்தம் கொண்ட தமிழச்சி. தமிழ்நாடு, தமிழகம் எல்லாமே இந்தியாவின் ஒரு அங்கம் தான். இந்தியாவின் மிகப்பெரிய அங்கத்தை இந்தியாவிலிருந்து தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழ்நாடு, தமிழகம் என எவ்வாறு வேண்டுமானாலும் அழைக்கலாம் தவறில்லை” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்