Skip to main content

‘நல்ல  மாட்டுக்கு  ஒரு  சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்  நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில்  கல்லூரி மாணவ மாணவிகளின் அமைப்பான ரோட்டராக்ட் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  பேசியபோது,  ’’நான் சட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ளமாட்டேன். அப்படி சட்டை கிழிந்தாலும் நல்ல சட்டை போட்டுக் கொண்டுதான் வெளியில் வருவேன்’’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து பேசினார். மேலும்,  தன்னைப்பார்த்து காப்பி அடித்துதான் கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் நடத்துகிறார் என்றும் விமர்சனம் செய்தார் கமல்ஹாசன்.

 

k

 

கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்தும்,  அவருக்கு எச்சரிக்கை விடுத்தும், இன்று வெளியாகியிருக்கும் முரசொலி பத்திரிகையில், கமலின் அரசியல் அரைவேக்காட்டுத்தனம் என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் கட்டுரை இது:     ’’கடை விரித்தேன் கொள்வாரில்லை’’ என்ற நிலையில் உள்ளவன் எந்த மனநிலைக்கு ஆளாவானோ அந்த மனநிலையில் கலைஞானி கமல்ஹாசன் நிதானமற்று பிதற்றத்தொடங்கிவிட்டார்.  அவர் எந்த அளவு நொந்து நூலாகியிருக்கிறார் என்பதை எம்.ஆர்.சி. நகரில் மாணவர்களிடையே  நடத்திய  கலந்துரையாடலில்,  அவர்  கொதிக்கும் எண்ணெய்ச்  சட்டியில்  போட்ட கடுகாக  வெடித்ததிலிருந்தே  அறிய  முடியும்!

நான்  சட்டையைக்  கிழித்துக்  கொள்ளமாட்டேன்  என, சம்பந்தமில்லாது,  அவலை இடிப்பதாக  நினைத்து  உரலை இடித்துள்ளார்  கமல்! அவர்  பேசுவது  என்ன;  ஏன் இப்படிப்  பேசுகிறார்  எனப் புரியாது; கேட்போரை எல்லாம் சட்டையைக் கிழித்துக் கொள்ள வைப்பாரே  தவிர,  அவர்  சட்டையை  ஒருநாளும்  கிழித்துக்கொள்ள மாட்டார் என்பதை நாடு நன்கறியும்!


கிராம சபை என்பதை தான்தான் முதன்முதலாக நடத்தியதாகவும்,  அதனை  ஸ்டாலின் காப்பி  அடித்துள்ளார்  என்றும் கூறி, காப்பி அடிக்க வெட்கமில்லையா எனத் தனது அரசியல் கத்துக்குட்டித்தனத்தை  வெளிச்சம்  போட்டுக்  காட்டியுள்ளார் கமல்!   அதாவது அவருக்கு சொந்தப் புத்தியும் கிடையாது, சொல்புத்தியும் இல்லை; அரசியல் வரலாறுகளைப்  படித்தறியும் பக்குவமும்  கிடையாது  என்பதற்கு  இதனைவிடச்  சிறந்த எடுத்துக்காட்டு  தேவையில்லை! அவர்  நடத்திய  கிராமசபைக்  கூட்டம்  கூட  அவர் மண்டையில்  உதித்ததல்ல;  சட்டப்  பஞ்சாயத்து  நடத்துபவர்கள்  கூறிய ஆலோசனை எனக்  கூறி,  தனக்கு  சொந்தப்  புத்தி  இல்லை என்பதைப்  பறைசாற்றி  அறிவித்துள்ளார். இந்த  கிராமசபைக்  கூட்டத்தை  தலைவர்  கலைஞர்  முதல்வராக  இருந்தபோதே, தனது அமைச்சரவையிலுள்ள  அமைச்சர்களைக்  கொண்டு  நடத்தியுள்ளார். அவரே பங்கேற்று நடத்திய  கூட்டம், அன்று வடஆற்காடு மாவட்டம் -  வாணியம்பாடி தொகுதியிலுள்ள   விண்ணமங்கலம்   கிராமத்தில் தொடங்கி  வைக்கப்பட்டது!

கமலஹாசனுக்கு  இதெல்லாம் தெரிய நியாயமில்லை; அந்தக் காலகட்டத்தில், அவர் ஏதாவது கதாநாயகியுடன்  `டூயட்’  பாடி,  ஆடிக்  கொண்டிருந்திருப்பார்! அதனால்தான், அவருக்கு  வரலாற்று  அறிவும்  மட்டு  என்று கருதுகிறோம்! இந்த வரலாறுகளெல்லாம் தெரியாததால்தான்,நேற்று  வந்த  சின்னப்பயலைக்  காப்பியடிக்க வெட்கமில்லையா? எனக் கேட்டு, தனது சின்னப்பிள்ளைத்தனத்தை, அவரே வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறார்! 

 

k

 

திராவிட  முன்னேற்றக்  கழக  வரலாற்றை முதலில்  கமலஹாசன்  படித்தறிய  வேண்டும்! எங்கள்  இயக்கத்  தலைவர்கள்,  முன்னோடிகள்;அது  தந்தை  பெரியாராக  இருந்தாலும், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் போன்றோரும், ஏன்;எங்களது  இன்றைய தலைவர் ஸ்டாலின் ஆனாலும்.  அவர்கள்  கால்  பதியாத  மண்,  அதுநகரமாக இருந்தாலும், கிராமமாக - குக்கிராமமாக இருந்தாலும் தமிழகத்தில்  இருக்க  முடியாது. இந்தத் தமிழ் மண்ணின் ஒவ்வொரு துளியிலும் அவர்களது பாதச்  சுவடு  பட்டுள்ளது. அதனால்தான் அரசியல் ஜாம்பவான்களால் கூட தி.மு.கழகத்தை அசைத்திட முடியவில்லை! தி.மு.கழகத்தை அழித்து, அது இருந்த இடத்தில் புல்முளைக்கச் செய்துவிடுவோம் எனச் சவால் விட்ட இயக்கங்கள் எல்லாம்  காணாமல்  போனதே  தவிர, கழகம்  இன்றும்  ஆழவேரூன்றி தழைத்தோங்கி நிற்கிறது என்றால், அதன் காரணமே, அது  நகரங்கள்  மட்டுமின்றி,  குக்கிராமம்  வரை,  ஆழ  வேர்பதித்து, அடித்தட்டு  மக்கள் வரை  அது  படர்ந்துள்ளதால்தான் என்பதை கமலஹாசன் உணராமல் பிதற்றக் கூடாது!

அறிவுலக  ஆசான்  அறிஞர்  அண்ணா,  தி.மு.கழகத்தினருக்குக் கற்றுத் தந்த பால பாடமே,``மக்களிடம் செல்! அவர்களோடு  கலந்திடு! அவர்களை அறிந்துகொள்!அவர்களை  நேசித்துப்  பணியாற்று! அவர்களோடு  இணைந்து  திட்டமிடு! அவர்கள் அறிந்ததிலிருந்து  தொடங்கு! அவர்கள் எண்ணங்களுக்கு வடிவமைத்திடு!’’-  என்பதுதான்.  முதலமைச்சர்  கனவில்  கட்சி  ஆரம்பித்து, அதனைக்  கொள்வாரில்லை  என்பது தெரிந்துவிட்ட  நிலையில்,  விரக்தியின்  உச்சக்  கட்டத்தில் நின்று  கமலஹாசன்  புலம்பத் தொடங்கியுள்ளார்!

தலைவர் ஸ்டாலின் மீது பாய்கிறார்; ரஜினி மீது விஷத்தைக் கக்குகிறார்; தன்னைத் தானே ‘சின்னப்பயல்’, ‘நேற்று வந்த  பயல்’  எனக்  கூறிக்கொள்கிறார்.  வெட்கம்  என்பதன் பொருளறியாது, பல வெட்கங்கெட்ட செயல்களை வெளிப்படையாகச் செய்து கொண்டிருப்பவர், நம்மைப் பார்த்து வெட்கமில்லையா எனக் கேட்கிறார்! இதை எல்லாம் பார்க்கும்போது  உச்சகட்ட  காட்சியாக, 'மூன்றாம் பிறை' திரைப்படத்தில் ரயில் நிலையத்தில், தலைமுடியைப்  பிய்த்துக்  கொண்டு,சட்டையைக்  கிழித்துக்  கொண்டு, பிளாட்பாரத்தில்  அங்குமிங்கும்  ஓடுவாரே,  அந்தக்  காட்சிகள்  நிஜத்தில்  நடந்துவிடுமோ என்று அஞ்சுகிறோம்! அரசியல் கட்சி துவங்கி,  எதனை  நோக்கிச் செல்கிறோம், பின்னால் வருபவர்களை  எங்கே  அழைத்துச்  செல்லப்  போகிறோம்  என்று  தெளிவற்றுத்  திரியும் கமல்ஹாசன், மற்றவர்களைப் பார்த்து வெட்கமில்லையா எனக்  கேட்பது கேலிக்கூத்தல்லவா?

மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கமலஹாசன் தனது அரசியல் அரைவேக்காட்டுத்தனத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார்! நமது ஊடகத் துறையினர், கமல்ஹாசன் இந்த மாணவர் சந்திப்பில் நமது கழகத் தலைவர் தளபதி குறித்துத்தரக்குறைவாக  பேசியது  பற்றி  புதுவையில்  அவரிடம், "கமல் உங்களைக்   கடுமையாக விமர்சனம் செய்துகொண்டிருக்கிறாரே!’’ எனக் கேள்வி கேட்டபோது, "நான் அரசியல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்’’ என பதிலளித்தாரே, அது ஒன்றே கமலஹாசனுக்கு வைத்த சூடல்லவா! புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்து உளறிய கமலஹாசனின் 'புத்திசாலித்தனத்தை',  ஒரே வரியில் பல்லிளிக்க வைத்து விட்ட பதில் அல்லவா அது! ‘நல்ல  மாட்டுக்கு  ஒரு  சூடு போதும்' என்பார்கள். கமல்ஹாசன் மேலும் ‘சூடு’களை எதிர்நோக்கமாட்டார் எனக் கருதுகிறோம். ’’

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என முதலில் அழைத்தது நான்தான்” - கமல்ஹாசன்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Kamal Haasan says I have already spoken to Vijay who has entered politics

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு இன்றைய நாளோடு 7ஆம் ஆண்டை நிறைவு செய்கிறது. அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க சென்னையில் இன்று (21-02-24) கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியை சென்னை அலுவலகத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஏற்றினார். 

அதன்பின், கமல்ஹாசன் தனது கட்சித் தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர், “இந்தியாவிலேயே 40 சதவீதம் பேர் ஓட்டு போடாமல் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் ஓட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும். என்னை எல்லோரும் முழு நேர அரசியல்வாதியா? என்று கேள்வி கேட்கிறார்கள். ஆனால், ஓட்டு போடாமல் இருப்பவர்கள் முழு நேர குடிமகனாக கூட இருக்கவில்லை. எனவே, அனைவரும் வாக்களிக்க வேண்டும். முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை. என் சொந்த காசை வைத்து கட்சி நடத்துகிறேன். என்னுடைய அரசியல் பயணம் என்பது ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து அழுத்தமாக நடைபோட்டுக்கொண்டே இருப்பேன். அரசியலை விட்டு என்னைப் போக வைக்க முடியாது. 

நாட்டு மக்களிடம் குடியுரிமை ஆட்டம் கண்டுள்ளது. விவசாயிகளை தடுக்க ஆணி படுக்கையை சாலையில் போட்டுள்ளது ஒன்றிய அரசு. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக வேளாண் பட்ஜெட்டின் விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்துள்ள நன்மையில் 10% கூட ஒன்றிய அரசு செய்யவில்லை. தெற்கு தேய்ந்தால் கூட பரவாயில்லை என்று நினைப்பவர்கள் தான் ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ளார்கள். மாநிலங்களுக்கு சரியான வரிப்பகிர்வு அவசியம்” என்று பேசினார்

அதனை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “கூட்டணி குறித்து நான் மட்டும் தனியாக சொல்ல முடியாது. மற்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு தான் கூற முடியும். கூட்டணி இறுதியானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். கட்சி அரசியலை தாண்டி நாட்டு நலன் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. அரசியலுக்கு வந்துள்ள விஜய்யுடன் ஏற்கெனவே பேசியிருக்கிறேன். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறிய முதல் வரவேற்பு குரல் என்னுடைய குரல் தான்” என்று கூறினார். 

Next Story

முரசொலி நிலம் வழக்கு; ஆணையம் விசாரிக்க உத்தரவு

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Murasoli land case; Commission to investigate

முரசொலி நிலம் தொடர்பான வழக்கை பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். 

முரசொலி அறக்கட்டளை பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக 2019ம் ஆண்டு பா.ஜ.க. நிர்வாகியான ஸ்ரீனிவாசன் என்பவர் தேசிய எஸ்.சி./எஸ்.டி. ஆணையத்தில் புகார் அளித்தார். அப்போது தேசிய எஸ்.சி./எஸ்.டி ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல். முருகன், இது தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து அந்த நோட்டீஸை ரத்து செய்யவும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலரான ஆர்.எஸ். பாரதி சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

2019ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எஸ்சி./எஸ்டி ஆணையம், சொத்தின் உரிமை தொடர்பாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்று தெரிவித்தாலும், அந்த நிலம் ஏற்கனவே பட்டியலினத்தோருக்கு ஒதுக்கப்பட்டதா எனும் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என ஆணையத்தின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 

இந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று (10ம் தேதி) நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தீர்ப்பளித்துள்ளார். அந்தத் தீர்ப்பில், ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையைத் தொடரலாம். அதேபோல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பிலும் விளக்கம் பெற்று உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.