
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், 'சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். சினிமாவில் சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்த பொழுது கலைஞர் தான் 'எந்த காலத்திலடா பேசினால் பராசக்தி' என வசனம் வைத்தார். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.
டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி. வரும் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். அடைவார்'' என்றார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருமாவளவன் இது குறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்துப் பேசுகையில், ''அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் நானும் கலந்து கொண்டு உரையாற்றினேன். உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிப்பது இன்றியமையாத தேவை என்றார். எப்படி தொற்று நோய்களை நாம் ஒழித்தோமோ அதேபோல் இதையும் ஒழிக்க வேண்டும் என்று பேசியதை இன்றைக்கு இந்திய அளவிலான பிரச்சனையாக உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களே பேசும் நிலை உருவாகியுள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது. சனாதனத்தை அழிப்பது என்பது ஒரு கருத்தியலை; ஒரு கோட்பாட்டை எதிர்த்து பேசும் ஒன்று. அதை ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் எதிரானது என்பது போன்ற திரிபு வாதத்தை அமித்ஷா போன்ற பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்களே பேசுவது வியப்பாக இருக்கிறது'' என்றார்.