![‘It does not teach students numbers; He will teach rummy '- Pmk Anbumani Ramadas insists!](http://image.nakkheeran.in/cdn/farfuture/QdScm0k2uZL4MsJ030s8ccnob5fH6ZtWXYTvHCzGyRs/1649916058/sites/default/files/inline-images/zzzdasdweqweqweqq.jpg)
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி எனப்படும் இணைய சூதாட்டம் காரணமாக பல்வேறு தற்கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் ரம்மி சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி பாடப்புத்தக்கத்தில் பாடம் ஒன்று இடப்பெற்றுள்ளதாகவும், அதனை நீக்க வேண்டும் எனவும் பாமகவின் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
'தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் ஆறாம் வகுப்பு கணிதப் பாட நூலில் முழுக்கள் என்ற தலைப்பிலான பாடத்திட்டத்தில் சீட்டுக்கட்டுகளைக் கொண்டு ரம்மி ஆட்டத்தை எவ்வாறு விளையாடுவது என்பது குறித்து விளக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மாணவர்களை சீரழித்துவிடும். முழுக்கள் என்ற பாடத்தின் நோக்கம் எண்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்குவதாக இருக்கலாம். ஆனால், அதற்கு நல்ல உதாரணங்கள் இருக்கும் நிலையில், ரம்மி ஆட்டத்தை எடுத்துக்காட்டாக வைத்திருப்பது தவறு. இது மாணவர்களுக்கு எண்களை கற்றுத்தராது; ரம்மியைத்தான் கற்றுத்தரும்.
ஆன்லைன் ரம்மி ஆட்டம் இளைய சமுதாயத்தை சீரழித்து தற்கொலைக்கும், கொலைகளுக்கும் வழி வகுத்துக் கொண்டிருக்கும் சூழலில், இந்தப் பாடம் சீரழிவை மேலும் அதிகரிக்கச் செய்யும். மாணவர்களுக்கு நன்மையை போதிக்க வேண்டிய பாடநூல்கள் தீமையைப் போதிக்கக்கூடாது. ரம்மியை ஊக்குவிக்கும் முழுக்கள் பாடத்தை மாற்றியமைத்தால் மட்டும் போதாது. சீட்டுக்கட்டுகளுடன் கூடிய அந்தப் பாடம் மாணவர்களின் கண்களில் படக்கூடாது. அதற்காக இப்போது வரும் கல்வியாண்டுக்கு அந்தப் பாடம் இல்லாத புதிய பாடநூல்களை அச்சிட்டு வழங்க அரசு முன்வர வேண்டும்' என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.