
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 21 திமுக வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அறிவித்தார். அதில் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் மகனும் தொழிலதிபருமான கே.என். அருண் நேரு அறிமுகப்படுத்தபட்டார்.
இதனைத் தொடர்ந்து சென்னையிலிருந்து திருச்சி வருகை புரிந்த பெரம்பலூர் தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் கே.என். அருண் நேருவுக்கு திருச்சி மாவட்ட எல்லையான சமயபுரம் சுங்கச்சாவடி அருகே மாவட்ட செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன், வைரமணி தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு ஆர்த்தி எடுத்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருண் நேரு, “பெரம்பலூர் மக்களின் முக்கிய கோரிக்கையான ரயில் நிலையம் அமைவதற்கு அமைவதற்கான சாத்திய கூறுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து அதனை கொண்டுவதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன். திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தான் எப்போதும் ஹீரோ. அனைத்து மக்களின் நலனை பேணி காக்கும் வகையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.