Skip to main content

“மேலும் ஒருவர் தற்கொலை; ஆளுநர் இன்றே ஒப்புதல் அளிக்க வேண்டும்” - பாமக அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

Governor should give approval today'-Pmk Anbumani Ramadoss requested

 

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என பல தரப்பிலிருந்து கண்டன குரல்கள் எழுந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மியை எதிர்த்து அவசர சட்டமும், சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், சட்ட மசோதாவிற்கு தற்போது வரை ஒப்புதல் அளித்து கையெழுத்திடவில்லை.

 

அவசர சட்டத்திற்கான காலவரையறை முடிந்த நிலையில், அது காலாவதியானது. இதற்கு முன்னரே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்ட மசோதாவில் தமிழக ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். அதேபோல் கையெழுத்திடவில்லை எனில் இதன் பிறகு இது தொடர்பாக உயிரிழப்புகள் ஏற்பட்டால் அது ஆளுநரையே சாரும் எனக் குறிப்பிட்டு இருந்தார். தற்பொழுது சட்ட மசோதா காலாவதியாகிவிட்ட நிலையில் சென்னையில் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 'சென்னை மணலியைச் சேர்ந்த பார்த்திபன் என்ற தானி (ஆட்டோ) ஓட்டுநர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தானி ஓட்டுநரின் தற்கொலை ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் 34-ஆவது தற்கொலை ஆகும்.  ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் இத்தகைய நிகழ்வுகள் தினசரி நடப்பதும், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதும்  தடுக்க முடியாதது ஆகி விடும்.

 

வாழ்க்கையில் முன்னேறும் நோக்கத்துடன் மகளிர் குழுவில் மனைவி கடனாகப் பெற்று வந்த ரூ.50 ஆயிரத்தை ஆன்லைனில் சூதாடி பார்த்திபன் இழந்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் ஒருவரை எந்த அளவுக்கு அடிமையாக்கும் என்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு எதுவும் இல்லை.

 

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. ஆன்லைன் சூதாட்டம் சமூகத்தை அழிக்கிறது. அதைத் தடுக்க சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என உயர்நீதிமன்றமே கூறியிருக்கிறது. அதை ஏற்று ஆன்லைன்  சூதாட்டத் தடை சட்டத்திற்கு  ஆளுநர்  இன்றே ஒப்புதல் அளிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்