
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திண்டுக்கல்லில் அதிமுக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விசுவநாதன் தலைமையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அதிமுக சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “ஸ்டாலின் அரசு கடந்த 9 மாத ஆட்சியில் எந்த சாதனையும் செய்யவில்லை. திமுகவினர் எதை சொல்லி வாக்கு கேட்பார்கள்.. தற்போது சட்டமன்றத் தேர்தல் வந்தால் அதிமுக 234 தொகுதியில் அதிமுக 200 தொகுதியில் மாபெரும் வெற்றி பெறும்” என பேசினார்.

அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, “தமிழகத்தின் முதல்வர் காணொளி மூலம் பரப்புரை செய்து வருகிறார். மக்களை சந்தித்தால் கேள்வி கேட்பார்கள் என்று காணொளி மூலம் பரப்புரை செய்து வருகிறார் முதல்வர். சொன்ன வாக்குறுதிகளை திமுக செய்யவில்லை. எந்த வேலையும் செய்யாமல் மக்களை ஏமாற்றி வருகிறார். ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதில்லை, 9 மாத கால ஆட்சியில் ஊழல், லஞ்சம் தான் அதிகரித்துள்ளது. அதிமுக வெற்றியை யாரும் தடுக்க முடியாது. 9 மாதகால ஆட்சியில் திமுக மக்களின் எதிர்ப்பைத் தான் சந்தித்துள்ளது” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் பேசும்போது, “திண்டுக்கல் மாவட்டம், ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. அதிமுகவிற்கு அச்சாரமாக விளங்கியது திண்டுக்கல். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 100க்கு 100 வாக்குறுதிகள் நிறைவேற்றிய அரசு அதிமுக அரசு தான். தாலிக்கு தங்கம் திட்டத்தை 4 கிராமில் இருந்து 8 கிராமாக உயர்த்தியது ஜெயலலிதா தான். திருமண உதவி தொகையை ரூ. 12,000 ஆக இருந்ததை ரூ. 18,000 ஆக உயர்த்தியது எடப்பாடி பழனிச்சாமி அரசு.

505 வாக்குறுதிகளை வீசியது திமுக அரசு. முதல் கையெழுத்து நீட் ரத்து செய்யப்படும் என முதல்வர் சொன்னார். ஆனால், செய்ய முடியவில்லை. ஏன் என்றால் நிர்வாகத்தன்மை தான். அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தரமாக கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தரமாக வழங்கவில்லை. திமுக பொங்கல் பரிசு வழங்கிய அரிசியை மாடு கூட சாப்பிட மறுக்கிறது. திமுகவுக்கு மக்களை பற்றி கவலை இல்லை. நீட் தேர்வில் தமிழக முதல்வர் மாயா ஜாலம் செய்து பார்க்கிறார். அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்ட உள்ளார்கள். தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அனைத்திலும் அதிமுக தான் வெற்றி பெறும். திமுக ஆட்சியில் உருப்படியான திட்டம் இல்லை. இன்னும் கொஞ்சம் நாளில் எந்த மந்திரியும் வீதிக்கு வர முடியாது. இழந்த ஆட்சியை மீண்டும் பெற இப்ப நல்ல காலம் வந்துள்ளது. மக்களுக்கு நல்ல ஆட்சியாக இந்த ஆட்சி அமையவில்லை. தந்தை பெரியார் கண்ட கனவை நனவாக்கிய முதல்வர் ஜெயலலிதா மட்டும் தான். 100க்கு 100 அதிமுக வெற்றி பெறும்” என கூறினார்.
இந்தக் கூட்டத்தில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி, வேடசந்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணி, திண்டுக்கல் முன்னாள் மேயர் மருதராஜ் உள்பட மாவட்ட, நகர கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.