Skip to main content

விவசாயிகளின் கருப்புக்கொடி போராட்டத்திற்கு முழு ஆதரவு... ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிவிப்பு

Published on 26/07/2020 | Edited on 26/07/2020
E.R.Eswaran

 

 

வருகின்ற 27-ஆம் தேதி நடைபெறுகின்ற விவசாயிகளின் கருப்புக்கொடி போராட்டத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி முழு ஆதரவு அளிக்கிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா நோய் தொற்றினால் இந்தியா தடுமாறிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் அவசர சட்டங்களை பிறப்பித்து நடைமுறைப்படுத்த துடிக்கும் மத்திய அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகி இருக்கின்ற சூழ்நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். 

 


விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறோம் என்று சொல்லி விட்டு விவசாயிகளின் நாடித்துடிப்பான இலவச மின்சாரத்தை நிறுத்த நினைப்பது ஏற்புடையதல்ல. சிறு, குறு விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே போராடும் நிலையில் இலவச மின்சாரத்தையும் நிறுத்தினால் தற்கொலை செய்து கொள்வதை விட வேறு வழி கிடையாது. 

 


இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்பதை பெயரளவுக்கு கூறினால் மட்டும் போதாது. விவசாயிகளுக்கு எதிரான சட்டத்திற்கு கரோனா காலத்தில் மத்திய அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?. கரோனாவின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகமாகி கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் மத்திய அரசு அவசர சட்டங்களுக்கு கவனம் செலுத்துவதை விடுத்து முதலில் மக்களின் உயிரை காப்பாற்ற முன்வர வேண்டும். 

 


மின்சார சட்டத்திருத்த மசோதாவினால் தமிழக அரசு விசைத்தறிக்கும், கைத்தறிக்கும் கொடுக்கும் இலவச மின்சாரமும் ரத்தாகும். சிறு விசைத்தறியாளர்கள் அரசாங்கம் கொடுக்கும் இலவச மின்சாரம் மற்றும் சலுகை மின்சாரம் மூலமாக தான் குடும்பத்திற்கு தேவையான வருமானத்தை ஈட்டி கொண்டிருக்கிறார்கள். இது நீக்கப்பட்டால் விவசாயிகளை விட அதிகம் பாதிக்கப்படுபவர்களாக விசைத்தறியாளர்கள் இருப்பார்கள். கைத்தறி இன்றைக்கு உயிரோடு இருக்கிறது என்றால் அதற்கான காரணம் இலவச மின்சாரம் தான். இலவச மின்சாரம் இல்லையென்றால் என்ன செய்வதென்று தெரியாமல் குடும்பத்தோடு நடுத்தெருவுக்கு வந்துவிடுவார்கள்.

 


அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு 27-ஆம் தேதி அறிவித்திருக்கின்ற கருப்புக்கொடி போராட்டத்தில் விவசாயிகள் மட்டுமல்லாமல் கைத்தறி மற்றும் விசைத்தறியாளர்களும் பங்கேற்க வேண்டும். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்று விவசாயிகளின் நலனை காக்க வேண்டுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.