Skip to main content

அதிமுக விவகாரம்; ‘நீதிமன்றத்தின் தீர்ப்புதான் இறுதியானது’ - தேர்தல் ஆணையம் பதில் மனு

Published on 18/08/2023 | Edited on 18/08/2023

 

Election Commission's reply petition in Delhi High Court regarding AIADMK issue

 

அதிமுகவில் நிகழ்ந்து வந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு பொதுச்செயலாளர் பதவிக்கு கொண்டுவரப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்ததையும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஓ.பி.எஸ் சார்பில் 5 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு தீர்மானங்களுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில் நீதிபதிகள் சகாதேவன் மற்றும் சவிக் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

இதனிடையே இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்குள் எடப்பாடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் விதிகள் மாற்றத்தை ஏற்றதோடு, கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருந்தது. 

 

இந்த நிலையில்தான் அதிமுகவின் விதிகள் மாற்றத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதற்கு எதிராக ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி இருவரும் டெல்லி  உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தாக்கல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், சென்னை உயர்நீதிமன்ற அளித்த தீர்ப்பும், அதனை உறுதி செய்த உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மட்டுமே அதிமுகவின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டதற்குக் காரணம். அதன் அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்தோம். இந்த விவகாரங்களில் தீர்ப்புதான் இறுதியானது என்பதனை நாங்கள் புரிந்துவைத்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளது.

 

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் முடிந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்