Skip to main content

“அரசியல் சூழ்நிலை காரணமாக மகா கூட்டணி முறிந்துவிட்டது” - நிதிஷ்குமார்  விளக்கம்

Published on 28/01/2024 | Edited on 28/01/2024
Due to the political situation, the Grand Alliance has broken up Nitish Kumar 

பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தார். இந்த சூழலில் ஆளும் கட்சி கூட்டணிக்குள் சில முரண்பாடுகள் இருப்பதாகப் பேசப்பட்டு வந்தது. மேலும் நிதிஷ்குமார் மகா கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் பீகாரில் ஏற்பட்ட பரபரப்பான அரசியல் சூழலில் பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை இன்று (28.01.2024) காலை 10.30 மணியளவில் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஆளுநரிடம் தனது ராஜினமா கடிதத்தை அளித்தார். இதனையடுத்து நிதிஷ்குமாரின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார். ஆளுநரின் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ்குமார், “இன்று நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். மேலும் மாநிலத்தில் ஆட்சியை கலைக்குமாறு ஆளுநரிடம் கூறியுள்ளேன். பலரிடமும் ஆலோசனை கேட்ட பிறகே இந்த முடிவை எடுத்துள்ளேன். அரசியல் சூழ்நிலை காரணமாக மகா கூட்டணி முறிந்துவிட்டது. மகா கூட்டணியில் ஏற்பட்ட குழப்பங்களை சரிசெய்ய முயற்சித்தும் முடியவில்லை. எனவே மகா கூட்டணியில் இருந்து விலகி விட்டேன். அதே சமயம் புதிய கூட்டணியை அமைப்பேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் பாஜக கூட்டணிக்கு நிதிஷ் குமார் மாறி பாஜக ஆதரவுடன் இன்றைய தினமே முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இன்று காலையில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்க நிதிஷ் குமாருக்கு அதிகாரம் வழங்கி அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பாட்னாவில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நிதிஷ்குமாருக்கு நிபந்தனையுடன் ஆதரவு தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பீகாரில் நிதிஷ் குமார் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், பாஜக தேசிய தலைவர் நட்டா, பாட்னா புறப்பட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்