Skip to main content

அதானி, அம்பானி நினைவில் மோடி : க – க – க நினைவில் OPS - EPS: மு.க.ஸ்டாலின் கண்டன பேச்சு

Published on 14/11/2018 | Edited on 14/11/2018
mkstalin 81



சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற திமுக முன்னோடி இல்லத் திருமணத்தை நடத்தி வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
 

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், 
 

பிரதமராக இருக்கக்கூடிய மோடிக்கு எது பிடிக்காது என்று கேட்டீர்கள் என்றால், சோசலிசம் பிடிக்காது ஜனநாயகம் பிடிக்காது, மதச்சார்பின்மை பிடிக்காது. இது தான் பிரதமருடைய வேலை, இந்த பிரதமராக இருக்கக்கூடியவர் பற்றி, நான் கூட அண்மையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகிற போது எடுத்துச் சொன்னேன். என்னவென்று கேட்டீர்கள் என்றால், வெளிநாடு வாழ் இந்தியர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
 

அதுபோல், வெளிநாடு வாழ் பிரதமர் யார் என்று கேட்டீர்கள் என்றால் மோடி தான் இதுவரைக்கும் பிரதமராக வந்து அவர் செய்துள்ள சாதனை உலகத்திலேயே பிரதமராக இருந்து மோடிதான் 84 நாடுகளுக்கு போய்வந்த நேரத்திலே அவருக்காக செலவு செய்த தொகை ஏறக்குறைய 1500 கோடி ரூபாய், அது அவர் சொந்த பணமா? மக்களுடைய வரிப்பணம் தயவு செய்து மறந்துவிடக்கூடாது. 
 

போகிற பிரதமர் அந்த நாட்டிற்கு சென்று இந்த காரியத்தை செய்திருக்கிறார். அந்த நாட்டில் இருந்து  இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தந்திருக்கிறார். அதனால், இந்தியா இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதற்கு போய் அவர் சுற்றுப்பயணம் செய்து வந்தால் கூட நான் கவலைப்பட மாட்டேன்.
 

உலகம் சுற்றும் வாலிபனைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். இன்றைக்கு உலகம் சுற்றும் பிரதமராக மோடி அவர்கள் விளங்கி கொண்டிருக்கிறார். இது தான் இன்றைக்கு நாட்டில் இருக்கக்கூடிய சூழ்நிலை இதை எல்லாம் நீங்கள் மறந்துவிடக்கூடாது. இன்றைக்கு நாட்டில் எங்கு பார்த்தாலும் போராட்டம் - ஆர்பாட்டம் விவசாயிகள் ஒருபக்கத்தில் - தொழிலாளர் தோழர்கள் ஒருபக்கத்தில் - அரசு ஊழியர்கள் ஒரு பக்கம் - சத்துணவு அமைப்பாளர்கள் ஒரு பக்கம். 
 

mkstalin 61


 

இன்றைக்கு வந்திருக்கிற செய்தி என்னவென்று பார்த்தீர்கள் என்றால், 1100 பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்படப்போவதை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய 5 லட்சம் ஊழியர்கள் அதில் இருக்கிறார்கள். 5 லட்சம் ஊழியர்கள் அதனால் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வியாபாரம் செய்ய முடியாத அளவிற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 
 

இன்றைக்கு சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பு கொடுத்துள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் அவர்கள் இன்றைக்கு தங்களுடைய தொழிலைக்கூட செய்யமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த பிரச்சனையை யார் தீர்த்து வைக்க வேண்டும். அரசு  பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள். மத்திய அரசும், மாநில அரசும் உடனடியாக தலையிட்டு அவர்களை அழைத்து உட்கார வைத்து பேசி ஒரு சுமுகமான தீர்வு ஏற்படுத்தி அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கூடிய இந்த சிக்கல்களில் இருந்து அவர்களை தப்பிக்க வைக்க இந்த அரசு முற்படுகிறதா என்றால் இல்லை. அவர்களைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைபட முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
 

மத்தியில் பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்களுடைய நினைவெல்லாம் அதானி – அம்பானி. இங்கு இருக்கக்கூடியவர்களுடைய நினைவெல்லாம் கமிஷன் – கலெக்சன் – கரெப்சன். அறிஞர் அண்ணா அவர்கள் நமக்கு கற்றுத் தந்தது கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு. ஆனால், கடமை – கண்ணியம் – கட்டுப்பாடை இவர்கள் பின்பற்றவில்லை. அதுவும் க – க – க தான். இப்படித்தான் அவர்களுடைய ஆட்சி இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறதே தவிர வேறல்ல, இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டக்கூடிய நேரம் விரைவிலே வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு பேசினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.