
தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி மகன் தங்கராஜ் (21), சங்கு குளி மீனவரான இவர் வீட்டுக்கு செல்லாமல் திரேஸ்வரம் கடற்கரையில் நிறுத்தி வைத்திருக்கும் நாட்டுப் படகுகளில் இரவு படுத்து தூங்குவது வழக்கமாம். இந்த நிலையில் நேற்றிரவு இவர் நாட்டுப் படகில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவில் அங்கு போதையில் வந்த கும்பல் சங்கு குளி மீனவர் தங்கராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளது.
தகவல் அறிந்து வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், டவுன் ஏ.எஸ்.பி. மதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வட பாகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சரக்கு அடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.எஸ்.பி. மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் நேற்று கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்டார். இதில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை மீனவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்த கொலை சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை எகிற வைத்துள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி