Skip to main content

இரத்ததானம் செய்து காப்பாற்றுங்கள்! - இளைஞரின் 6ஆயிரம் கி.மீ. நடைபயணம்

Published on 19/04/2018 | Edited on 19/04/2018

இரத்ததானம் செய்யவேண்டிய தேவையை வலியுறுத்தி இளைஞர் ஒருவர் 6ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

 

Blood

 

ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் கிரண் வெர்மா (வயது 33). இவர் புற்றுநோயால் தனது தாயார் உயிரிழந்த நிலையில், இரத்ததானம் செய்யவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து சிம்ப்ளி பிளட் (Simply Blood) என்ற மெய்நிகர் ஆண்ட்ராய்டு செயலியை வடிவமைத்துள்ளார். மேலும், நாடு முழுவதும் இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஸ்ரீநகரில் தொடங்கி உதய்ப்பூர், வதோதரா, சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகள் வழியாக திருவனந்தபுரம் வரை கிட்டத்தட்ட 6 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். 2020ஆம் ஆண்டுக்குள் இரத்ததானத்தின் மூலமாக 10 லட்சம் உயிர்களைக் காப்பது மட்டுமே தனது இலக்கு எனக் கூறும் கிரண், இதற்காக தான் பார்த்துவந்த வேலையையும் விட்டுவிட்டார். 

 

இதுகுறித்து கிரண் வெர்மா பேசுகையில், ‘ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதியில் இருந்து ஜனவரி 26ஆம் தேதி நடக்கத் தொடங்கி தற்போது திருவனந்தபுரத்தை அடைந்துள்ளேன். இதுவரை 6 லட்சம் பொதுமக்களை சந்தித்து இரத்ததானம் குறித்து பேசியுள்ளேன். கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ரயில்நிலையங்கள் என அனைத்து பொது இடங்களிலும் என இலக்கு குறித்தும் நான் விளக்கியிருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். மேலும், நாளொன்றுக்கு சரியான நேரத்தில் இரத்தம் கிடைக்காமல் 12ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். நம் நோக்கம் எல்லாம் ஒரு கிலோமீட்டருக்கு இடைப்பட்ட தூரத்தில் 10 பேரையாவது ‘வாழ்நாளில் ஒருமுறையாவது இரத்ததானம் செய்வேன்’ என உறுதிமொழி ஏற்கச்செய்வதுதான்’ என உறுதிபடப் பேசுகிறார். 

 

இவரது சிம்ப்ளி பிளட் செயலி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 11அ நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 2ஆயிரம் பேரின் உயிரைக் காப்பாற்ற அது பயன்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

"ரத்தம் தேவைப்படுவோர் அணுக உதவி எண்"- கமல்ஹாசன் அறிவிப்பு! 

Published on 15/06/2022 | Edited on 15/06/2022

 

"Helpline number for those in need of blood" - Kamal Haasan announcement!

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று (15/06/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "எமது ரசிகர் மன்றங்கள், நற்பணி இயக்கங்களாக மாற்றப்பட்டு நாற்பதாண்டுகள் ஆகின்றன. 

 

எங்கள் நற்பணி நாயகர்கள் தொடர்ந்து, பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக, கடந்த நான்கு தசாப்தங்களில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் ரத்தம் தானமாக வழங்கி, எண்ணற்ற உயிர்களைக் காத்துள்ளனர். 

 

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்க நண்பர்களை தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணைத்து, உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் 'Kamal's Blood Commune' உருவாக்கியுள்ளோம். தமிழில் 'கமல் குருதிக்கொடை குழு'. 

 

இதன் மூலம் ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்கத்தினர் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். 9150208889 எனும் பிரத்யேக எண்ணுக்கு அழைத்தால், அந்ததந்தப் பகுதிகளில் இருக்கும் எங்கள் கொடையாளிகள் மூலம் ரத்தம் தேவைப்படுவோருக்குத் துரிதமாக உதவ முடியும். ரத்த தானம் செய்ய விரும்பும் சமூக சேவகர்களும், இந்த எண்ணை அழைத்து தங்களைப் பதிவு செய்துக் கொள்ளலாம். 

 

ரத்த தானம் செய்வதற்குரிய உடல் ஆரோக்யம் கொண்டர்வர்கள் இந்த அரும்பணியில் தங்களை இணைத்துக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். குருதிக் கொடையாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு குழுவைத் தொடங்கி ரத்த தானம் செய்வது பாராட்டுக்குரிய முன்னோடி முயற்சி. இதனை முன்னெடுத்த மக்கள் நீதி மய்யத்தினரை மனதாரப் பாராட்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

Next Story

மூதாட்டியின் உயிரைக் காத்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி... நம்பிக்கைத்தரும் மனிதம்..!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

Grandmother's life-saving vision-changing ability ...

 

‘இருக்கும் வரை ரத்த தானம்! இறந்த பின் கண் தானம்!’ இந்த வாசகங்களை அரசும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அவசரமாக ரத்தம் தேவை என்பதால் பல்வேறு தண்ணார்வ அமைப்புகள், இளைஞர்கள் மூலம் ரத்தம் கொடுத்து உயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.

 


புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அறந்தாங்கி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத மூதாட்டி சகுந்தலாவுக்கு அவசரமாக ரத்தம் தேவை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் இயங்கி வரும் ‘குருதிக்கூடு’ என்ற தன்னார்வ அமைப்பு, மூதாட்டிக்கான ரத்தம் கொடுக்க தயாரானபோது, தகவல் அறிந்து சிறிது நேரத்தில் செம்பாட்டூர் அரசுப் பள்ளி ஆசிரியரான பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சிவா, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு தனது நண்பரும் சக ஆசிரியருமான வீரமாமுனிவருடன் வந்து ரத்தம் கொடுத்தார். 

 

பார்வையற்ற மாற்றுத் திறனாளியான ஆசிரியர் சிவா, ரத்ததானம் செய்திருப்பதை கேள்விப்பட்ட மருத்துவக்கல்லூரி டீன் பூவதி மற்றும் சமூக ஆர்வலர்களும் அவரது உயிர் காக்கும் சேவையை பாராட்டினார்கள்.

 

இது குறித்து ஆசிரியர் சிவா, “பார்வையற்ற மாற்றுத் திறனாளியான எனக்கு முகம் தெரியாத பலரும் பல உதவிகளை செய்திருக்கிறார்கள். அதனால் நாமும் மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இன்று மூதாட்டியின் உயிரை காக்க என் ரத்தம் உதவியுள்ளது. தொடர்ந்து ரத்த தானம் செய்வேன். என்னைப் போல அனைவரும் மற்றவர்களின் உயிர் காக்க ரத்ததானம் செய்யலாம்” என்றார்.

 

 
குருதிக்கூடு ரத்த தான அமைப்பினர் கூறும் போது, ‘இந்த அமைப்பு தொடங்கி 3 மாதங்களில் 350 பேருக்கு ரத்த தனாம் செய்திருக்கிறோம். பல கர்ப்பிணிகளுக்கு நெகடிவ் குரூப் ரத்தங்கள் தேவைப்படும் அப்போது மாவட்டம் முழுவதும் உள்ள ரத்த தான அமைப்புகள் மூலம் பெற்று கர்ப்பிணிகளுக்கு கொடுத்து உயிர்களை காத்திருக்கிறோம். இப்போது ஆசிரியர் சிவா தானாக முன்வந்து ரத்தம் கொடுத்து மூதாட்டியின் உயிரை காப்பாற்றியிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதே போல எல்லாரும் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்’ என்றனர்.